துணிகளைக் காய வைக்கப் பயன்படும் கம்பத்தில் மைனா ஒன்றை ஒரு மாது தொங்கவிட்ட சம்பவம் ஈசூனில் நடந்துள்ளது.
வீட்டுக்குள் வந்த மைனா மீண்டும் வீட்டுக்குள் வராமல் இருப்பதற்கான பாடம் புகட்டவும், அந்த மைனாவின் நிலையைப் பார்த்து மற்ற பறவைகள் அதே தவற்றைச் செய்யக்கூடாது என்று அச்சிறுத்துவதற்காகவும் மைனாவை அவ்வாறு தொங்கவிட்டதாக அம்மாது அதிகாரிகளிடம் கூறினார்.
(காணொளியை முழுமையாகக் காண Full Screen Modeக்கு செல்லவும்)
வீட்டின் சன்னளுக்கு வெளியே மைனா தொங்கிக்கொண்டிருப்பதைப் பற்றி தகவல் அறிந்து ‘ஏக்கர்ஸ்’ அதிகாரிகள் உடனே அவ்விடத்திற்குச் சென்றனர். மைனா சிக்கிக்கொண்டதாக எண்ணிய அதிகாரிகளுக்கு மாது கொடுத்த காரணம் அதிர்ச்சியை அளித்தது.
தான் வேண்டுமென்றேதான் மைனாவைத் தொங்கவிட்டதாகவும் இப்படிச் செய்தால் தன் சமையலறைக்குள் வரக்கூடாது என்று மற்ற மைனாக்களுக்கும் தெரிய வரும் என்றும் கருதுவதாக அந்த மாது தன் செயலுக்கு விளக்கம் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மாதின் செயல் 'விலங்குக்கு இழைக்கப்பட்ட கொடுமை' என்பதைச் சுட்டிக் காட்டிய அதிகாரிகள், வீட்டிற்குள் பறவைகள் வராமல் இருக்க வேறு என்ன உபாயம் செய்யலாம் என்பது பற்றி அறிவுறுத்தினர்.
காயங்கள் உள்ளதா என்று மைனாவைச் சோதித்த பின்னர் அதற்கு உணவும் தண்ணீரும் கொடுத்து, பின்னர் பறக்கவிட்டதாகக் கூறப்பட்டது. சம்பவத்தின் தொடர்பில் தேசிய பூங்காக் கழகம் விசாரித்து வருகிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity