சிங்கப்பூர் முந்தைய நிலைக்குத் திரும்ப தற்போது வாய்ப்பில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான போராட்டம் நீண்டகாலத்திற்கு நீடிக்கலாம் என்றார் அவர்.
அண்மையில் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு, கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்துவது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டது. இது குறித்து தமது கருத்தை பிரதமர் லீ சியன் லூங் நேற்று ஃபேஸ்புக் வழியாக பகிர்ந்துகொண்டார்.
“கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் ஜூன் 1ஆம் தேதி முடிவுக்கு வரும்போது கட்டுப்பாடுகள் எப்படி படிப்படியாக தளர்த்தப்படும் என்பது பற்றி பணிக்குழு விளக்கியிருந்தது.
“பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது, வர்த்தகங்களைத் திறந்துவிடுவது, நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்துவது, குடும்பத்தினரையும் அன்புக்குரியவர்களையும் நேரில் சந்திப்பது போன்ற வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்ப நாம் அனைவரும் ஆவலுடன் இருக்கிறோம்.
“ஆனால் வழக்கநிலைக்கு தற்போது திரும்ப முடியாது. கொரோனாவை முறியடிக்கும் நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்துள்ளன. சூழ்நிலைகள் மேம்பட்டு வருகின்றன. இருந்தாலும் கிருமிக்கு எதிரான போாராட்டம் ஓயாது. “அதனால் கட்டம் கட்டமாக வர்த்தகங்கள் திறக்கப்படுகின்றன,” என்று தமது பதிவில் லீ குறிப்பிட்டார்.
“சமூக அளவில் கிருமிப் பரவல் மிகவும் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற் பட்ட பிறகே உணவு, குளிர்பானக் கடைகளில் உணவு அருந்த அனுமதிக்கப்படும்,” என்று கூறிய பிரதமர், அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்.
சில நாடுகளில் வர்த்தகங்கள் திறக்கப்பட்ட பிறகு புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் தலை தூக்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“ஒருவருக்கு கிருமி தொற்றி னாலே பெரிய அளவில் கிருமிப் பரவல் குழுமம் உருவாகிவிடும்,” என்று அவர் எச்சரித்தார்.
“இதற்காக கதவை நாம் எப் போதும் மூடி வைத்திருக்க முடி யாது. உலகளவில் கிருமிப் பரவல் நிலவுவதால் பாதுகாப்பாக வேலை செய்யவும் புதிய வாழ்க்கை முறைக்கும் சரி செய்துகொள்ள வேண்டும். கொவிட்-19 கிருமித் தொற்று பரவாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல் படுவோம். இந்த அனுபவத்திலிருந்து நாம் வலுவுடன் எழுவோம்,” என்று பிரதமர் லீ அறைகூவல் விடுத்தார்.