ரியாத்: சவூதி செய்தியாளர் ஜமால் கஷோகியைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டோம் என்று அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த கஷோகி, துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு வந்தபோது கொல்லப்பட்டார். 2018 அக்டோபரில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை சவூதி அரேபியா முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக் கொண்டது. 2019ஆம் ஆண்டு டிசம்பரில் ரியாத்தில் நடைபெற்ற ரகசிய வழக்கு விசாரணைக்குப் பிறகு கஷோகி கொலையில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இதனை ஏற்காத ஐநாவின் ஏக்னஸ் கலாமார்ட், வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் கஷோகியின் மகன்களில் ஒருவரான சாலா கஷோகி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்ட தகவலில் தந்தையைக் கொன்றவர்களை புனித ரமலான் மாதத்தில் மன்னித்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் சவூதி அரசாங்கத்தின் விசாரணையில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் கூறியிருந்தார்.