முதற்கட்ட கட்டுப்பாடு தளர்வின்போது எவற்றுக்கெல்லாம் அனுமதி உண்டு, அனுமதி இல்லை என்பதை சற்று பார்க்கலாம்.
வழிபாட்டுத் தலங்கள்
1 வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் ஐந்து குடும்பங்கள் மட்டும் தனிப்பட்ட வழிபாட்டில் ஈடுபடலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
2 திருமணம், இறுதிச் சடங்கு தொடர்பான வழிபாடுகளைத் தவிர்த்து மற்ற சடங்கு களுக்கு அனுமதி இல்லை. திருமணம், இறுதிச் சடங்கு தொடர்பான நிகழ்வுகளில் 10 பேர் வரை கலந்துகொள்ள லாம்.
உணவகங்கள், கடைகள்
1 உணவு அங்காடி நிலையங்கள், உணவகங்கள், உணவு நிலையங்களில் சாப்பிட அனுமதி இல்லை. இந்த உணவு விற்கும் கடைகளில் தயாரித்து விற்கப்படும் உணவு வகைகளைப் பொட்டலம் கட்டி வீட்டிற்குக் கொண்டு சென்று சாப்பிடலாம். அல்லது உணவு விநியோகச் சேவையைப் பயன்படுத்தலாம்.
2 பகுதிவாரிக்கடைகள், கடைத்தொகுதிகளில் உள்ள கடைகள் போன்ற பெரும்பாலான சில்லறை வர்த்தகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அவை இணையம் மூலம் வியாபாரம் செய்யலாம்.
3 ஈரச்சந்தைகள், பேரங்காடிகள், பேக்கரிகள், மருந்துக்கடைகள், சீனப் பாரம்பரிய மருந்துக்கடைகள், முடி திருத்தும் கடைகள் ஆகியவை திறந்திருக்கலாம்.
4 திறந்திருக்கும் கடைகள் SafeEntry பதிவு முறை போன்ற பாதுகாப்பான தூர இடைவெளிக்கான உத்திகளைக் கையாள வேண்டும்.
5 பள்ளிகளில் உள்ள புத்தகக்கடைகளும் பள்ளிச் சீருடைகளை விற்கும் கடைகளும் திறந்திருக்கும்.
6 நாளையிலிருந்து கூடுதல் வங்கிக் கிளைகள் திறக்கப்படும்.
7 பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நாணய மாற்றுநர்கள் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
8 குளிர்சாதனப் பெட்டிகளைப் பராமரிக்கும், பழுதுபார்க்கும் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி, விளையாட்டு, வெளிப்புற நடவடிக்கைகள்
1 வீட்டிற்கு அருகில் உள்ள இடங்களிலேயே உடற்பயிற்சி செய்யவும்.
2 குடும்பத்தாருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். குடும்பத்தார் இல்லாத மற்றவர்களுடன் இணைந்து உடற்பயிற்சி செய்யக்கூடாது.
3 உடற்பயிற்சி செய்ய வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது முகக்கவசத்தைக் கழிற்றிவிடலாம். உடற்பயிற்சி செய்து முடிந்ததும் முகக்கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும்.
4 பூங்காக்களில் அமைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி இடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
5 ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை, சாங்கி கடற்கரை, பாசிர் ரிஸ் கடற்கரை, பொங்கோல் கடற்கரை, செம்பவாங் கடற்கரை, வெஸ்ட் கோஸ்ட் கடற்கரை ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
6 விளையாட்டரங்குகள், பொது நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள், மற்ற உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
7 கூட்டுரிமை வீடுகளில் உள்ள நீச்சல் குளங்களும் உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்பட்டிருக்கும். தனியார் உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்பட்டிருக்கும்.
8 கன்ட்ரி கிளப்களில் நீச்சல் குளங்கள், கோல்ஃப் மைதானங்கள் போன்ற வசதிகளும் மூடப்பட்டிருக்கும்.
கல்வி, பள்ளிகள்
பாலர் பள்ளிகள்
1 நாளையிலிருந்து பாலர் பள்ளிகள் கட்டம் கட்டமாக திறக்கப்படும். மழலையர் வகுப்பு, கே1 மாணவர்கள், கே2 மாணவர்கள் வெவ்வேறு நாட்களில் பள்ளிக்குத் திரும்புவர்.
2 பாதுகாப்பான தூர இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.
3 பிள்ளைகளுக்கான பராமரிப்புச் சேவை ஆதரவு தேவைப்பட்டால் பாலர் பள்ளியை பெற்றோர் அணுகலாம்.
4 ஊழியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அல்லது முகக்காப்பு அணிந்துகொள்ள வேண்டும். 2 வயதுக்கும் குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை.
பள்ளிகள்
1 தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக்கல்லூரிகள், மில்லேனிய கல்விக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் நாளையிலிருந்து பள்ளிக்குத் திரும்புவர்.
2 பெரும்பாலான தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அவரவர் பயிலும் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வாரங்களில் பள்ளிகளுக்குச் செல்வர். பள்ளிக்குச் செல்லாத வாரங்களில் அவர்கள் வீட்டிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்வர்.
3 பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்படும் தொடக்கக்கல்லூரி, மில்லேனிய கல்விக் கழக மாணவர்களின் எண்ணிக்கையில் வரம்பு விதிக்கப்படும்.
4 மாணவர்கள் பள்ளிக்குக் கட்டாயம் செல்ல வேண்டும். மருத்துவ ரீதியில் குறிப்பிட்ட பிரிச்சினைகள் இருந்தால் மட்டுமே அவர்கள் பள்ளிக்குச் செல்ல தேவையில்லை.
5 பாதுகாப்பான தூர இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.
6 அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முகக்கவசம் அல்லது முகக்காப்பு அணிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். மாணவர்கள் மேசைகள் போன்றவற்றைப் பயன்படுத்திய பிறகு அவை சுத்தம் செய்யப்படும்.
7 தேர்வு நேரங்களில் மாணவர்கள் அமர்வது போல மேசைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கப்படும்.
8 மாணவர்கள் அவர்கள் பயிலும் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு நேரத்தில் பள்ளிக்கு வருவர், பள்ளி முடிந்து வீடு திரும்புவர், இடைவேளைக்குச் செல்வர்.
பல்கலைக்கழகங்கள்
1 சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்குத் தொடர்ந்து இணையம் மூலம் விரிவுரைகளும் கற்பித்தலும் நடத்தப்படும்.
2 ஆய்வுக்கூடங்களில் நடத்தப்படும் பாடங்களுக்கு அவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டும்.
3 சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உட்பட மற்ற சுயேட்சைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அவர்களது வகுப்புகள் தொடங்கும்.
துணைப்பாட வகுப்புகள்
துணைப்பாட வகுப்புகளை இணையம் வழி மட்டுமே நடத்தலாம்.
வேலையிடங்கள்
1 ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் அணுகுமுறையை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்ட
2 கட்டுப்பாடு தளர்வு, இரண்டாம் கட்ட கட்டுப்பாடு தளர்வு ஆகியவற்றில் மீண்டும் இயங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களும் இதில் அடங்கும்.
3 தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்ய வேண்டும். தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் வேலையிடத்துக்குச் செல்லலாம். உதாரணத்துக்கு, வீட்டில் பெற முடியாத, வேலையிடத்தில் மட்டுமே பெறக்கூடிய வேலைக்குத் தேவையான சாதனங்களைப் பெற அவர்கள் அங்கு செல்லலாம். இந்த விதிமுறையை நிறுவனங்களும் ஊழியர்களும் பின்பற்றுகின்றனரா என்பதை உறுதி செய்ய மனிதவள அமைச்சு சோதனை மேற்கொள்ளும்.
4 வேலையிடத்தில் இருக்கும் ஊழியர்கள் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
5 உற்பத்தித் துறையைச் சேர்ந்த வேலையிடங்களில் அனைத்து சாதனங்களும் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யப்படவேண்டும்.
6 வேலையிடத்தில் இருக்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாததற்கான காரணத்தை நிறுவனங்கள் விளக்க வேண்டும்.
போக்குவரத்து
1 வெளியே செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். இந்த விதிமுறையை முதல்முறையாக மீறுபவர்களுக்கு $300 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமுறையை மீறுபவர்களுக்கு $1,000 அபராதம் விதிக்கப்படும். அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு பதிவானால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
2 பேருந்துகளிலும் எம்ஆர்டி ரயில்களிலும் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பது சிரமம் என்பதால் பயணிகள் முகக்கவசங்களை அணிந்துகொள்ள வேண்டும். முகக்காப்புகளை அணியக்கூடாது.
3 பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க பேருந்துகள், எம்ஆர்டி ரயில்களின் தரையில் ஒட்டப்பட்டுள்ள பச்சை ஒட்டுவில்லைகளின் மீது நிற்க பயணிகள் முயற்சி செய்ய வேண்டும். ஆரஞ்சு நிற ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ள இருக்கை களில் பயணிகள் அமரக் கூடாது.
4 அனைத்து வாகனப் பட்டறைச் சேவைகளும் நாளை முதல் மீண்டும் தொடங்கலாம்.
சுகாதாரப் பராமரிப்பு
1 கூடுதல் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் திறக்கப்படும். அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2 மோசமான கண்புரை, கைகளுக்கான அறுவை சிகிச்சை, பற்கள் தொடர்பான குறிப்பிட்ட சில சிகிச்சைகள் அனுமதிக்கப்படும்.
3 சளிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, தேசிய சேவைக்கு முன்பு செய்துகொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை ஆகியவை அனுமதிக்கப்படும். ஆனால் சுகாதார மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் நடத்தப்படும் நாள்பட்ட நோய் மற்றும் புற்றுநோய்க்கான மருத்துவப் பரிசோதனை இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் தளர்வின்போது மீண்டும் தொடங்கும்.
4 ஏற்கெனவே இருக்கும் உடல் உபாதைகளைச் சமாளிக்க பாரம்பரிய சீன மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய சிகிச்சை முறைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
5 மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளைப் பார்க்க அதிகபட்சம் இரு குடும்பங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். ஐவர் மட்டும் முன்கூட்டியே பதிவு செய்யலாம். ஒவ்வொருவராக சென்று பார்க்க முடியும்.