ப. பாலசுப்பிரமணியம்
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியிலிருந்து ராடின் மாஸ் தனித்தொகுதியில் இம்முறை தேர்தலில் போட்டியிடவிருக்கும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) வேட்பாளர் திரு மெல்வின் யோங்கிற்கு, பழக்கப்பட்ட தொகுதி என்பதால் ஓரளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்.
தற்போது வேலை பாதுகாப்பு மக்களின் முக்கிய கவலையாக உள்ளது எனக் கூறிய அவர், தேசிய தொழிற்சங்க காங்கிரஸில் உதவி தலைமைச் செயலாளராக தாம் இருப்பதால் தொழிலாளர் இயக்க அனுகூலங்களுடன் சமூக பங்காளிகளுடன் இணைந்து வேலை தேடுபவர்களுக்கு உதவ முடியும் என்றார்.
தஞ்சோங் பகார் நகர மன்றத்தின் தலைவராகக் கடந்த 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்ததில் ராடின் மாஸ் தொகுதியின் மேம்பாட்டு திட்டங்கள் பலவற்றில் தமது பங்களிப்பு அடங்கியுள்ளது என்றார் அவர். தற்போதுள்ள வசதிகள் குறித்து குடியிருப்பாளர்கள் திருப்தியாக உள்ளனர் என்றாலும், சிறுவர் விளை யாட்டுக் கூடங்கள், குடும்பங்களுக்கு ஏதுவான வசதிகள், பசுமை நிறைந்த இடங்கள் என கூடுதலான மேம்பாட்டு திட்டங்களை அத்தொகுதியில் முன்வைத்துள்ளதாக திரு மெல்வின் கூறினார்.