புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் பதிவாகும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு நாட்களுக்குப் பின் குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் புதிதாக 53,601 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் குணமடைந்தோர் விகிதம் 69.80 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தினமும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வந்தன. தற்போது எண்ணிக்கை குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2.26 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 45,257ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 1.5 மில்லியன் நோயாளிகள் கொவிட்-19 பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். தற்போது சுமார் 6,39,929 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 9ஆம் தேதி வரை சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதிகபட்சமாக ஒரே நாளில் 7 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. பாதிப்பு குறைவது மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.