கொச்சி: கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் தாவூத் இப்ராகிம் (படம்) தரப்புக்கும் தொடர்புகள் இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை சந்தேகிக்கிறது.
கடத்தல் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த சந்தேகத்தைப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தித் தங்கக் கடத்தல் நடந்துள்ளது. கிலோ கணக்கிலான தங்கம் கடத்தி வரப்பட்டது தொடர்பாக கேரள அரசு ஊழியர் ஸ்வப்னா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் ஐக்கிய அரபு சிற்றரசின் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இக்கடத்தலில் தொடர்பிருக்கக்கூடும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த இருந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகம் திடீரென மூடப்பட்டுள்ளது.
தூதரக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இருப்பதால் எதிர்வரும் 20ஆம் தேதி வரை தூதரகப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது தங்கக் கடத்தலில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை குறிப்பிட்டது.
தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம் தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பயங்கரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள புலனாய்வு முகமை, அதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரமீஸ் என்பவர் தான்சானியா நாட்டில் வைர வியாபாரத்தில் ஈடுபட முயன்றதாகவும் தங்கச் சுரங்கத்துக்கான உரிமம் பெற்றிருப்பதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தான்சானியாவில் கிடைத்த தங்கத்தை அவர் ஐக்கிய அரபு சிற்றரசில் விற்பனை செய்துள்ளார்.
“இந்நிலையில் தான்சானியா வைர வியாபாரத்தில் தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு இருப்பதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத் சம்பந்தப்பட்ட வைர வியாபார நடவடிக்கைகளைத் தென்இந்தியாவைச் சேர்ந்த பெரோஸ் என்பவர் கவனிப்பதாகத் தெரிகிறது.
“இது தொடர்பான தகவல்களைப் புலனாய்வு அமைப்புகள் சேகரித்துள்ளன,” என்று தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனவே, தங்கக் கடத்தலில் தாவூத் இப்ராகிம் தரப்புக்குத் தொடர்புகள் இருப்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டி உள்ளது எனவும் புலனாய்வு முகமை மேலும் தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கக்கூடாது என்று வலியுறுத்திய அம்முகமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கைதான 180 நாட்களுக்குள் பிணை வழங்குவதை நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.