தஞ்சாவூர்: தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035வது சதயவிழா நேற்று நடத்தப்பட்டது. இவ்விழாவின் முக்கிய அம்சமாக தமிழில் பாராயணம் பாடப்பட்டது.
பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் தமிழில் பெரு வுடையாருக்கு அர்ச்சனை செய்யப்படவேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததைத் தொடர்ந்து, அந்த வேண்டுகோளை ஏற்று நேற்று தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டன.
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்தநாளான ஐப்பசி சதய நட்சத்திரதினமான நேற்று 1035வது சதய விழா நடைபெற்றது.
விழாவில் ராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெருவுடையாருக்கு 42 வகை யான பொருட்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, தமிழில் பாராயணமும் பாடப்பட்டது.
விழாவின் தொடக்கமாக நேற்று காலை மங்கல இசையோடு பெரிய கோயிலில் விழா தொடங்கியது.
தொடர்ந்து, கோயில் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்புப் பூசைகள் செய்து கோயிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தைப் பாடினர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலும் ராஜராஜ சோழன் சிலைகள் உள்ள இடமும் மின்னொளி சிந்த அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
கோயிலில் பக்தர்கள் குறைந்த அளவே தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
சதய விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கத்தினரும் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்துடன், தஞ்சாவூர் நகரம் முழுவதும் போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சதய விழா நடைபெறுமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில், விழா நேற்று ஒருநாள் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டது. கொரோனா தடுப்புக்கான பாது காப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார்.