கன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியை சேர்ந்த செல்லசுவாமி என்பவரது மகன் நவீன், 32.
பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்த நவீன் வேலை தேடி வந்தார்.
வங்கித் தேர்வு உட்பட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் எழுதியும் அவருக்கு வேலைகிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விரக்தியின் உச்சத்துக்குச் சென்ற அவர், தனக்கு வேலை கிடைத்தால் உயிரை காணிக்கையாகத் தருவதாக இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.
பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத அவருக்கு மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளர் பணி சில நாட்களுக்கு முன்பு கிடைத்தது.
வேலைக்கு சேர்ந்து 15 நாட்களுக்கு பின் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்தவர் அங்கிருந்து மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பரைப் பார்த்து பேசிவிட்டு, தான் ஊருக்கு வந்துள்ளதாக சகோதரரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.
பின்னர் பேருந்தில் நாகர்கோவில் வந்திறங்கி அங்கிருந்து புத்தேரி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
அவரது உடலை போலிசார் ஆராய்ந்தபோது, அவரது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றைக் கொண்டு அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.
தம் பெற்றோருக்கு எழுதி வைத்த கடிதத்தில், தன்னுடைய வேண்டுதல் பற்றிய தகவல்களை விவரித்து தாம் நேர்த்திக் கடனைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேலை கிடைக்காமல் பலர் தவிக்கும் வேளையில், நன்கு படித்த ஒருவர் இத்தகைய வேண்டுதல்களை முன்னிறுத்தி, நிறைவேற்றிய செயல் மூட நம்பிக்கையின் உச்சம் என பலரும் கருத்துரைத்துள்ளனர்.