அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததற்கான ஆதாரமில்லை என்று குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடனும் அவருடன் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிசும் 290 தேர்வு சபை வாக்கு களுடன் அசைக்க முடியாத நிலையில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் தோல்வியை ஒப்புக் கொள்ளாத அதிபர் டோனல்ட் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள தேர்தல் அதிகாரிகள், கொவிட்-19 கிருமி பரவும் அபாயகரமான சூழ்நிலையிலும் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்து ஜனநாயக நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று குறிப்பிட்டனர்.
“தேர்தலைப் பற்றி உண்மையில்லாதவற்றையும் கற்பனை செய்து பார்க்கக்கூடியது மனித சுபாவம், தேர்தல் என்றாலே ஏதோ ஒரு காரணத்துக்காக ஊகங்களும் வதந்திகளும் பரவுகின்றன,” என்று ஒஹையோ மாநில தேர்தல் அதிகாரியான குடியரசுக் கட்சியின் ஃபிராங்க் லாரோஸ் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மின்னசோட்டாவின் தேர்தல் அதிகாரியான ஸ்டீவ் சைமன், “தேர்தல் மோசடி எதுவும் இல்லை என்று கூறினார்.
கன்சாஸ் மாநிலத்திலும் வாக்கு அளிப்பதிலும் வாக்குப் பதிவிலும் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரியவில்லை என்று அம்மாநில பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
இதற்கிடையே நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜோ பைடன்தான் வெற்றி பெற்றார் என்று குடியரசுக் கட்சியினர் உட்பட 80 விழுக்காடு அெமரிக்கர்கள் நம்புகின்றனர்.
ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 தேர்வு சபை வாக்குகள் தேவை. தேர்தலில் ஜோ பைடன் 290 தேர்வு சபை வாக்கு களைப் பெற்றுள்ளார். அதிபர் டோனல்ட் டிரம்புக்கு 214 வாக்குகளே கிடைத்துள்ளன.
மேலும் ஜோ பைடனுக்கு 76.3 மில்லியன் அதாவது 50.7 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. டிரம்ப் 71.6 மில்லியன் அதாவது 47.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.
ராய்ட்டர்ஸ், இப்சோசின் ஆய்வு சனிக்கிழமை தொடங்கி செவ் வாய்க்கிழமை வரை நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்களில் 79 விழுக்காட்டினர் பைடனே வெற்றி பெற்றதாக நம்புகின்றனர்.
மூன்று விழுக்காட்டினர் டிரம்ப் வெற்றி பெற்றதாகவும் ஐந்து விழுக்காட்டினார் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே தேர்தல் முடிவு களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் சட்ட நடவடிக்கைகளை எடுத்தாலும் அதிகார மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் ஜோ பைடன் கூறினார்.
டெலவரில் பேசிய திரு பைடன் தானும் தமது குழுவினரும் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பு ஏற்பதற்கு முன்பு புதிய நிர்வாகத்தை அமைத்து வருவதாகத் தெரிவித்தார்.
டிரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ளாதது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சொன்னார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதன்முதலாக செய்தி யாளர்களுக்கு திரு பைடன் பேட்டி யளித்தார். அப்போது, இந்தப் பேட்டியை டிரம்ப் பார்த்து கொண்டி ருந்தால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பைடன், “அதிபர் அவர்களே, உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக் கிறேன்,” என்றார்.