அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் உருவாக்கி விநியோகிக்கும் தடுப்பு ஊசி மருந்தை கொவிட்-19க்கு எதிரான அவசர பயனீட்டுக்குப் பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது.
வளரும் நாடுகளுக்கு அந்த மருந்து வேகமாகக் கிடைக்க உதவுவது இதன் நோக்கம்.அந்த மருந்தைப் பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் தேசிய சுகாதார அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி விளக்குவதற்காக பங்காளிகளுடன் சேர்ந்து பாடுபடப்போவதாக ஐநா அமைப்பான இந்தச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது. உலகில் உள்ள ஏழ்மை நாடுகள் பலவற்றிலும் சொந்த ஒழுங்குமுறை ஏற்பாடுகள் இல்லை. அத்தகைய நாடுகள் இந்த மருந்தை விரைவாக அங்கீகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இல்லை எனில் மருந்து கிடைப்பது தாமதமாகிவிடும். ஆகையால் இத்தகைய நாடுகளுக்கு உதவுவதற்காக உலக சுகாதார நிறுவனம் அவசர பயனீட்டுப் பட்டியல் நடைமுறை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. இந்தச் சுகாதார நிறுவனம் ஃபைசர் பயோஎன்டெக் மருந்தைப் பரிசோதித்துப் பார்த்தது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை என்ன என்ன கட்டாயமானவையோ அவை அந்த மருந்தில் இருப்பதை நிறுவனம் கண்டறிந்துள்ளது. உலகம் கொவிட்-19 தடுப்பு ஊசியைப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு ஐநாவின் இந்த முயற்சி ஆக்ககரமான ஒன்று என்று இந்த நிறுவனத்தின் மருந்து செயல்திட்ட தலைவர் டாக்டர் மரியங்கெலா சிமாவ் தெரிவித்தார்.இருந்தாலும் யார் யாருக்கு முதலில் மருந்து சென்று சேரவேண்டுமோ அவர்களுக்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்ய இன்னும் பெரிய உலக முயற்சி தேவை என்றும் அவர் கூறினார்.
உலக சுகாதார நிறுவனம் இதர சில அமைப்புகளுடன் சேர்ந்து ஏழை நாடுகளுக்கு மருந்து கிடைப்பதை உறுதிப்படுத்த உலக முயற்சி (கொவெக்ஸ்) தொடங்கி இருக்கிறது. இந்த முயற்சியை இதர சில அமைப்புகளுடன் சேர்ந்து உலக சுகாதார நிறுவனம் மேற்பார்வை செய்தும் வருகிறது. இந்த முயற்சியின் பலனாக 2021 தொடக்கத்தில் இருந்து ஏறக்குறைய 2 பில்லியன் தடுப்பூசி மருந்து விநியோகிக்கப்படும்.