மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவப் படையினர் குண்டு பாய்ச்சிய சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன், ஐக்கிய நாட்டு தலைமைச் செயலாளர் எண்டோனியோ குட்டேர்ரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலிசார் உண்மையான தோட்டாக்களைக் கொண்டு சுட்டதில் ஆர்ப்பாட்டக்காரர்களில் இருவர் உயிரிழந்தனர். இருப்பினும், நேற்று ஆயிரக்கணக்கில் எதிர்ப்பாளர்கள் வடக்கே, தெற்கே என பல நகரங்களில் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.
அத்துடன் இன்று மிகப் பிரம்மாண்ட அளவில் பேரணி ஒன்றை நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவளித்த பிரபல நடிகர் லூ மின்னை நேற்று போலிசார் கைது செய்ததாக கைதானவரின் மனைவி தெரிவித்தார்.
மேலும், ‘ட்ரூ நியூஸ்’ எனும் ராணுவத்தின் பிரதான ஃபேஸ்புக் பக்கம், வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி ஃபேஸ்புக் அதை நீக்கியது.
இன்று ஒருமைப்பாட்டைக் காண்பிக்க, கடைகளும் வர்த்தகங்களும் தங்களின் கதவுகளை மூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியன்மாரின் ஆகப் பெரிய வர்த்தக நிறுவனமான ‘சிட்டி மார்ட்’, அதன் அனைத்து கிளைகளையும் மூடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அமைதியான முறையிலேயே நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு அடக்க முயல்வது, ஏற்கெனவே பரிதவிப்பில் உள்ள மியன்மார் பொருளியலை மேலும் நெருக்குவதாக உள்ளது. தனியார் வங்கிக் கிளைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன. தானியங்கி இயந்திரங்களிலும் பணம் குறைந்துகொண்டே வருகிறது. இன்று நாடெங்கும் மக்கள் திரளாக வருவதைக் காண முடியும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறிய ஜனநாயக தேசிய லீக் கட்சியின் திரு ஆங் கியாவ் கியாவ் ஊ, “வன்முறையைக் கையாளும் ராணுவத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும்,” என்றார்.