சிங்கப்பூரில் நடப்பு கொவிட்-19 கிருமி அலையை ஒடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நடைமுறை ஒரு மாத காலத்திற்கு இயல்பான ஒன்றாக இருக்கும்.
வீட்டிலிருந்தே வேலை பார்க்கக்கூடிய ஊழியர்கள் அந்த ஏற்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24 வரை பல்வேறு நடவடிக்கைகளும் நடப்பில் இருந்து வரும் என சுகாதார அமைச்சு அறிவித்தது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஏற்பாட்டில் 10 நாட்களுக்கு விலக்கு அளிக்கும் நடைமுறை இந்த மாத தொடக்கத்தில் நடப்புக்கு வந்தது. இது நிறுத்தி வைக்கப்படும் என்று அமைச்சு நேற்று கூறியது.
பல்வேறு வேலையிடங்களுக்கும் ஊழியர்களைப் பிரித்து அனுப்பும் நடைமுறையும் தொடர்ந்து நடப்பில் இருக்கக்கூடாது என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
வேலையிடங்களில் சமூக ஒன்றுகூடல்களுக்கும் தொடர்ந்து தடை இருந்துவரும். முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை நேர ஏற்பாடுகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். வேலையிடத்திற்கு வரவேண்டிய தேவையுள்ள ஊழியர்கள் வேலையைத் தொடங்கும் நேரத்தையும் அவர்கள் மாற்றியமைக்க வேண்டும்.
சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று கூடிவருகிறது. இந்த நிலையில் வேலையிட விதிமுறைகள் கடுமையாகின்றன.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக வேலையிட விதிமுறைகள் கடுமையாகின்றன.
அன்றாட தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அளவுக்கு அதிகமாகக் கூடினால் அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு நாள் பாதிப்பு 3,200 என்ற அளவை எட்டக்கூடும் என்று சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
வீட்டிலிருந்து வேலை பார்க்க முடியாத ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள், வியாபாரிகள் வாராவாரம் கொவிட்-19 விரைவு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள்.