சென்னை: தமிழகத்தின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாமக இளையரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை இம்மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழகத்தில் சென்னை வானொலி நிலையத்துக்கு அடுத்ததாக, அதிக அளவில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்புவது இந்நான்கு வானொலி நிலையங்கள்தான். இனி வாரம் ஒரு நாள் மட்டுமே இந்நிலையங்கள் சொந்தமாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இம்முடிவு மண்டல வானொலி நிலையங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ, அதைச் சிதைத்துவிடும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா எவ்வாறு பன்முகத்தன்மை கொண்ட நாடோ, அதேபோல் தமிழகமும் பன்முகத்தன்மை கொண்ட மாநிலம்தான் என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி, அனைத்துத் தரப்பு மக்களாலும் வெகுவாக நேசிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் திடீரென நிறுத்தப்படுவது மக்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.