புதுடெல்லி: ஐந்து மாநிலத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மெய்நிகர் ஏற்பாட்டின் வழியாக நடைபெற்றது. இதில் குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புடைய வேட்பாளர்கள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க மத்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர்களுடன் மத்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இதில், குற்றவியல் வழக்கு பின்னணியைக் கொண்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட புதிய விதிமுறைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால், அவர்களைப் போட்டியிட வைக்கும் அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, அவ்வகையான வேட்பாளரின் பெயரை கட்சி அறிவித்த 48 மணி நேரத்திற்குள் அவர்களைப் பற்றிய முழுமையான விவரத்தை கட்சி வெளியிட வேண்டும். இதை நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக விளம்பரமாக வெளியிட வேண்டும்.
இதில், அந்த வேட்பாளர் மீது உள்ள வழக்குகள் எத்தனை? அதன் விவரம் என்ன? ஆகியவை இடம் பெற வேண்டும். நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் எந்தநிலையில் உள்ளன என்பது குறித்தும் தெரிவிக்கவேண்டும்.
குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்குபவரை வேட்பாளராக்கக் காரணம் என்ன? எனவும், குற்றப்பின்னணி இல்லாதவரை தேர்தலில் நிறுத்தாது ஏன்? என்றும் அவ்விளம்பரத்தில் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள், வேட்பாளர் பெயர் அறிவித்த நான்கு நாட்களில் வெளியாக வேண்டும். பிறகு வாக்குத் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் மீண்டும் வெளியிடப்பட வேண்டும்.
கடந்த 2018 செப்டம்பர் 25இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவியல் வேட்பாளர்களுக்கான இந்த விதிமுறைகள் வெளியாகி இருந்தது. ஐந்து மாநில ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம், மத்திய தேர்தல் ஆணையரான அஜய் குமார் சுக்லா தலைமையில் நடைபெற்றது. வரும் நவம்பர் முதல் இந்த ஐந்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் திருத்தம் நடைபெற உள்ளது. இதில், ஊர் மாறிய மற்றும் காலஞ்சென்றவர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது. இத்துடன் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் 18 வயது நிறைவடைபவர்களின் பெயர்கள் புதிய வாக்காளர்களாகப் பட்டியலில் சேர்க்கப்படும். இப்பட்டியல் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.