சிங்கப்பூரில் மோசடிகள்அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அதிகமானோர் சிக்கும் நான்கு வகை மோசடிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
குறுஞ்செய்திவழி மோசடி
ஓசிபிசி வங்கி தொடர்புடைய அண்மைய மோசடிகளில், வங்கியில் இருந்து வருவது போன்ற குறுஞ்செய்திகளை மோசடிப் பேர்வழிகள் அனுப்பினர்.
தமது வங்கிக் கணக்கில் ஏதோ பிரச்சினை இருப்பதால் அதை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் அக்குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பைச் சொடுக்குமாறும் அதைப் பெற்றவர் கேட்டுக்கொள்ளப்படுவார்.
உண்மையானதுபோல் தோன்றும் அந்தப் போலி இணையத்தளத்தில் உள்நுழைவுத் (login) தகவலையும் ஒற்றைப் பயன்பாட்டுச் சொல்லையும் அவர்கள் கொடுத்தால், அவர்களது கணக்குகளில் மோசடிப் பேர்வழிகள் ஊடுருவி, பணத்தைச் சுருட்டிவிடுவர்.
ஆள்மாறாட்ட மோசடி
காவல்துறை, வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அல்லது அரசாங்க அதிகாரிகள்போல் மோசடிக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்வதுண்டு.
குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்புவழி நம்பவைத்து, வங்கிக் கணக்கு, அடையாள அட்டை எண் போன்ற விவரங்களைப் பெற்று, மோசடி இடம்பெறுவதுண்டு. அதேபோல, கூகல் தேடல் முடிவுகளில் போலியான நேரடி அழைப்பு எண்களை இடம்பெறச் செய்து, அதன்வழியாக வங்கி ஊழியர்கள்போல் நாடகமாடி, மோசடிப் பேர்வழிகள் தகவல்களைப் பெறக்கூடும்.
மின்வணிக, விநியோக மோசடி
இணைய வணிகத்தளங்களில், சமூக ஊடகங்களில் போலியான பொருள்களைப் பட்டியலிடுவர்.பொருளை வாங்க விரும்புவோர் அதற்குரிய தொகையைச் செலுத்தியதும் மோசடிப் பேர்வழிகள் கம்பிநீட்டிவிடுவர்.
காதல் மோசடி
'டேட்டிங்', சமூக ஊடகத் தளங்கள் வழியாக நமபகமான துணைபோலக் காட்டிக்கொண்டு, நம்பிக்கையைப் பெற்றபின், நம்பும்விதமாக கதையை அவிழ்த்துவிட்டுப் பணத்தைக் கறந்துவிடுவர்.