தனிநபர்களுக்கு அதிருப்தி ஏற்படும்போது, ஆதரவற்றவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி களின் வழி மனநிறைவு அடை யலாம் என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் தெரிவித்திருக்கிறார்.
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடந்த சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிக்கு பல இன, சமயங்களின் 250 மூத்த குடிமக்கள் கலந்துகொண்டனர். கடந்த சில நாட்களாக நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களைப் போலவே இந்த நிகழ்ச்சியும் சிங்கப்பூரின் நல்லிணக்கப் பெருமையை உணர்த்தியதாக நிகழ்ச்சியைச் சிறப்பித்த திரு யோங் கூறினார். ஆலயம் 17வது ஆண்டாக இந்த நல்லிணக்க விருந்தை நடத்தியது. இத்தகைய நிகழ்ச்சிகள், வசதி உள்ளோருக்கும் வசதி குறைந்தோருக்கும் பாலமாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார். சன்லவ் முதியோர் பராமரிப்பு இல்லம், தெம்புசு முதியோர் பராமரிப்பு நிலையம், கிரேத்தா ஆயர் சமூக மன்றம் , சாஸ்கோ, ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லம் ஆகிய அமைப்புகளின் இல்லவாசிகளுக்கு அறுசுவை விருந்து படைக்கப்பட்டது.
சீன பாணியில் தயாரித்து பரிமாறப்பட்ட அந்த உணவு, முதியோர் எளிதில் மென்று ஜீரணிக்கும் விதத்தில் இருக்கவேண்டும் என்று உணவு தயாரித்த தலைமை சமையல் வல்லுநர் பத்மநாதன் வேலாயுதம் கூறினார்.
“முதியோருக்குப் பாதுகாப்பாக உணவைப் பரிமாறுவதற்கென்றே கிட்டத்தட்ட 20 தொண்டூழியர்கள் பயிற்சி பெற்றனர்,” என்று திரு பத்மநாதன் கூறினார்.
இளம் வயதில் மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் தீமிதியில் பங்கேற்ற கண்ணப்பன் ராமச்சந்தி ரன், 90, ஸ்ரீ நாராயண மிஷன் மூல மாக மீண்டும் இங்கு நண்பர்களுடன் வந்தது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
இந்து ஆலயத்திற்கோ சீனப் புத்தாண்டு விருந்திற்கோ இதுவரை சென்றதில்லை என்றார் சன்லவ் நிலையத்தைச் சேர்ந்த ஷாஃபியா அலியாஸ், 66. “எல்லோரும் ஒன்றுகூடி அன்பு காட்டுவதால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என கண்ணீர்மல்கக் கூறினார். நிகழ்ச்சியில் சிங்க, கடல்நாக நடனங்களுடன் சீன, மலாய் இந்திய கலைப்படைப்புகளும் இடம்பெற்றன. வயதானவர்கள் ரசிக்கக்கூடிய பாடல்கள் மூன்று மொழிகளிலும் இடம்பெற்றதால் சிலர் உற்சாகம் மேலோங்க பாடவும் ஆடவும் தொடங் கினர். இறுதியில் லோ ஹெய் என்ற பதார்த்தத்தை சாப்பாட்டுக் குச்சிகளால் மேலே வீசி எறியும் அங்கமும் ஆராவாரத்துடன் நடந்தேறியது.
“ஆலயம் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சைனாடவுன் வட்டாரத்தில் இருப்போர் பக்க பலமாக இருந்து வருகின்றனர். அவர்களது பரந்த மனப்போக்கை இந்தக் கொண்டாட்டம் அங்கீகரிக்கிறது,” என்றார் ஆலய நிர்வாகக் குழுவின் தலைவர் சீ.லெச்சுமணன்.