ஈஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்கள் கலந்து உரையாடுவதற்கு புதிய தளம் ஒன்று ஏற்படுத்தவிருப்பதாக துணைப் பிரதமரும் அத்தொகுதிக்கான மசெக குழுவுக்குத் தலைமை தாங்குபவருமான ஹெங் சுவீ கியட் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அந்தத் தளத்தின் வாயிலாக குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து தங்களிடம் உள்ள யோசனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக் கலாம் என்று இணையம் வழி உரையாற்றிய அவர் கூறினார்.
இந்த கலந்துரையாடல் தொடர் சென்ற 2012ல் தொடங்கப்பட்டது. இது சிங்கப்பூரர்களின் விருப்பங்களை மேலும் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் உருவாகவிருக்கும் இந்தத் தளம், மக்கள் முக்கிய கவனம் செலுத்தும் பிரச்சினைகள் பற்றி பேச உதவும்.
ஈஸ்ட் கோஸ்ட்டில் தொகுதி உலா மேற்கொண்டபோது குடியிருப்பாளர்களில் பலர் தங்களது விருப்பங்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறிய திரு ஹெங், இந்த உரையாடல் தளத்தில் கருத்துகளையும் யோசனைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளலாம் என்றார். பின்னர் அவற்றைச் செயல்படுத்துவது குறித்தும் சிந்திக்க வேண்டும்.
இந்தத் தளத்திற்கு மசெகவின் அறிமுக வேட்பாளரான டான் கியட் ஹாவ் தலைமை வகிப்பார். இவர் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.
“இந்தத் தொகுதிவாசிகள் ஆர்வமும் ஈடுபாடும் மிக்கவர்கள். சமூகத் தோட்டம் அமைப்பது முதல் முதியவர்களுக்கு திறன்பேசி, கணினிப் பயன்பாட்டை கற்றுத்தருதல் பலவற்றிலும் ஈடுபடுகிறார்கள்,” என்றும் திரு ஹெங் கூறினார்.