எலித் தொல்லை பிரச்சினையினால் பீஷான் ஸ்திரீட் 13ல் உள்ள கிம் சான் லெங் உணவு நிலையத்தின் (படம்) உரிமம் வரும் வெள்ளிக்கிழமை அன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. தனது வளாகத்தை எலித் தொல்லையிலிருந்து பாதுகாக்கத் தவறிய இரு குற்றங்களுக்காகவும் குப்பையைப் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு குப்பைத் தொட்டியில் போடத் தவறிய ஒரு குற்றத்துக்காகவும் அந்த உணவு நிலையத்துக்கு வாரியம் $1,100 அபராதமும் விதித்தது.
வாரியத்தின் தண்டப் புள்ளிகள் முறையின்கீழ், கடந்த 12 மாதங்களில் மொத்தம் 16 தண்டப் புள்ளிகளை இந்த உணவு நிலையம் பெற்றது. இத்தகைய குற்றங்களைக் கடுமையானதாகக் கருதுவதாகக் கூறிய வாரியம், உணவக நடத்துநர்கள் சிறந்த உணவு சுகாதார நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் பின்பற்ற நினைவூட்டப்படுகின்றனர் என்று கூறியது. சுற்றுப்புற பொதுச் சுகாதாரச் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாரியம் எச்சரித்தது.