போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் புதிய விதிகள் இன்று நடப்புக்கு வருகின்றன. போதைப்புழக்கத்தை ஊக்குவிக்கும் செயல்களை ஒடுக்க வகைசெய்யும் மற்ற புதிய மாற்றங்களும் இந்தச் சட்டத்தில் இடம்பெறுகின்றன.
சட்டத்தில் இடம்பெறும் மேற்கண்ட இந்த விதிகள், சிறுவர்களைப் பாதுகாக்க உதவுவதோடு போதைப் புழங்கிகளுக்கான ஆதரவை அதிகரிக்கவும் உதவும்.
போதைப்பொருட்களைத் தயாரிப்பது, உட்கொள்வது, அல்லது அவற்றைக் கடத்துவது உள்ளிட்ட காரியங்களை எப்படி செய்வது என்பது பற்றி மற்றவருக்குச் சொல்லித் தருவதோ தகவல் அளிப்பதோ குற்றமாகும்.
முதன்முறையாக இக்குற்றம் புரிவோருக்கு குறைந்தபட்சம் ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதிகபட்ச சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக இருக்கும்.
நாடாளுமன்றத்தில் இவ்வாண்டு ஜனவரி 15ஆம் தேதி போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. மூன்று முறை அல்லது அதற்கும் அதிகமான முறை போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் புரிவோருக்கு நீண்டகால சிறைத் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக அவர்களைப் போதையர் மறுவாழ்வு நிலையத்தில் சேர்க்க சட்டத்தில் மற்றொரு முக்கிய விதி ஜனவரி 16ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
முன்னதாக, முதன்முறை அல்லது இரண்டாவது முறையாக போதைப்பொருள் குற்றம் புரிந்தோரே போதையர் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை குற்றங்கள் புரிந்தோருக்கு குறைந்தது ஐந்து ஆண்டுச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் இடம்பெறும் முதற்கட்ட விதிகள் இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வந்தன. போதைப்பொருள் புழக்கத்திற்காக குறைந்தபட்ச தண்டனை, சட்ட அமலாக்கத்திற்கு கூடுதல் அதிகாரம் உள்ளிட்ட அம்சங்கள் அந்த மாற்றங்களில் அறிமுகம் கண்டன.
இம்மாதம் நடப்புக்கு வந்துள்ள இரண்டாம் கட்ட விதிகளின்படி, போதைப்பொருட்களைத் தயாரிப்பது, உட்கொள்வது அல்லது அவற்றைக் கடத்துவது தொடர்பான எந்தவித தகவலைப் பரப்புவதும் வெளியிடுவதும் குற்றமாகும்.
முதன்முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
போதைப்பொருட்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு தெரியும்படி போதைப்பொருட்களை விட்டுச்செல்வது குற்றமாகும்.