கடல் மட்டம் உயர்வது என்பது சிங்கப்பூர் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று என்றும் அதனைச் சமாளிக்க அரசாங்கம் பெரும் பொறியியல் திட்டங்களை ஆராய்ந்து வருகிறது என்றும் பிரதமர் லீ தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரின் கிழக்குக் கடலோரப் பகுதியில் கடற்பரப்பிலிருந்து நிலப்பகுதியை உருவாக்குவது, நிலமீட்பு உத்தி ஆகியவற்றோடு அந்தப் பகுதியிலிருக்கும் தீவுகளின் கடலோரப் பகுதிகளை மீட்பது போன்றவை ஆராயப்பட்டு வரும் அம்சங்கள்,” என்றார் அவர்.
“இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்னதாக அனைத்து அம்சங்களும் கவனத்துடன் ஆராயப்படும். என்றாலும் கடல் நீர்மட்டம் உயர்வது என்பது சிங்கப்பூர் சமாளிக்கத் தயாராக வேண்டிய ஒரு பிரச்சினை.
“நமது நகரத்தின் ஒரு பெரிய பகுதியை இழந்துவிட்டு இதர பகுதிகளில் எப்போதும்போல இயங்கலாம் என்று எதிர்பார்ப்பது இயலாத காரியம்.
“ஜூரோங் தீவும் கிழக்குக் கடற்கரை ஓரத்திலிருந்து நகரப் பகுதி வரையிலான நீண்ட பகுதியும் கடல் நீர் மட்ட உயர்வினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் எளிதில் சிக்கக்கூடிய பகுதிகளில் சில,” என்று பிரதமர் தெரிவித்தார்.
கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலைச் சமாளிக்க பிரதமர் எடுத்துரைத்த உத்திகள் சிங்கப்பூரின் இதர அம்சங்களுக்கும் நன்மைபயக்கக்கூடியனவாக அமையக்கூடும்.
“நாட்டின் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் நிலப்பகுதி அதிகரிப்பு போன்றவை அவை.
மரினா ஈஸ்ட் முதல் சாங்கி வரையிலான தீவின் கடலோரப் பரப்பை மீட்பது சிங்கப்பூரின் தண்ணீர் மீள்திறனை அதிகரிக்க உதவும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
“அவற்றை அணைக்கட்டுகளோடு இணைக்க முடியும்.
“மரினா நீர்த்தேக்கத்தைப் போன்ற சுத்தமான தண்ணீர் தரக்கூடிய நீர்த்தேக்கத்தை நம்மால் உருவாக்க இயலும்.
“நமது தண்ணீர் மீள்திறனை அதிகரிக்கக்கூடியது என்பதால் இந்தத் தீர்வை தேசிய தண்ணீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் விரும்பும்.
“சிங்கப்பூரின் கிழக்குக் கடலோரப் பகுதியில் புதிய நிலப்பகுதியை எழுப்பும் நடவடிக்கை கடல் மட்ட உயர்விலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பதோடு நமது மொத்த நிலப்பகுதியை அதிகரிக்கவும் உதவும்.
“கடல் மட்டத்துக்குக்கீழ் உள்ள நிலப்பகுதியை மீட்பதுதான் இந்த நடவடிக்கை. முதலில், மீட்கப்பட வேண்டிய பகுதியைச் சுற்றிலும் தடுப்பரண் கட்டப்பட வேண்டும். பின்னர் அந்தப் பகுதியிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும்,” என்றார் திரு லீ.