மேளதாளம் இல்லை, ஓம் முருகா! ஓம் முருகா! முழக்கம் இல்லை, வண்ண வண்ணக் காவடிகளில் ஊர்வலம் இல்லை. எனினும் பக்தர்களின் வருகை தடைபடவில்லை.
சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் திரளும் முக்கிய இந்து திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரம் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால் கொவிட்-19 கிருமிப் பரவலை எதிர்க்கும் முயற்சிகளில் ஒன்றாக இவ்வாண்டு பங்குனி உத்திர காவடி/பால்குட ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.
அதையடுத்து ஈசூன் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நேற்று மூடப்பட்டாலும் பக்தர்கள் கோயில் வாசலிலிருந்து முருகக் கடவுளை வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
“பக்தர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது நிலவி வரும் கிருமித்தொற்று சூழ்நிலை பற்றி பெரும்பாலோருக்குப் புரிகிறது. முறையான பாதுகாப்பு இடைவெளிகள், முகக்கவசங்களும் கையணிகளும் அணிவது போன்ற முன்னெச்
சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்,” என்றார் கோயிலின் துணைப் பொருளாளரான திரு தனேந்திரன் தேவேந்திரன், 44.
அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் பால் பொட்டலங்கள் வாங்கி பால் அபிஷேகங்களுக்கு வழங்கினர். பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அபிஷேகங்களும் பூசைகளும் அக்கோயிலின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பட்டன.
ஸ்ரீ பாலசுப்பிரமணியரின் உற்சவ மூர்த்தி சிலை, ராஜ கோபுரத்தின் நுழைவுவாயில் வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் கோயில் வாசலிலிருந்து வழிபட வசதியான சூழலை அது ஏற்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் வழக்கமாக சேவை செய்யும் ஏறக்குறைய 160 தொண்டூழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 20க்குக் குறைக்கப்பட்டது.
அத்துடன் அர்ச்சகர்களைத் தவிர்த்து எந்நேரமும் கோயிலுக்குள், அனுமதி பெற்ற நிர்வாக உறுப்பினர்கள் அல்லது தொண்டூழியர்களையும் சேர்த்து 10 பேர்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது என்றும் கோயில் நிர்வாக உறுப்பினரான 65 வயது திரு எஸ்.கே.பாலாசுப்பிரமணியம் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பங்குனி உத்திரம் சிறப்பாக நடைபெற வேண்டும் எனப் பக்தர்கள் விருப்பம் தெரிவித்தனர்.