கொவிட்-19 நோயாளிகளுக்கான சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களை அமைத்து அவற்றை நடத்தி வருவதில் தான் லாபம் பார்ப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சர்பானா ஜூரோங் நிறுவனம் மறுத்து உள்ளது.
சிங்கப்பூர் எக்ஸ்போ உள்ளிட்ட சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களை அமைத்து அந்நிறுவனம் “லாபம் ஈட்டுவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும்” வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொய்த் தகவல்கள் வலம் வந்துள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்துவது நியாயமற்றது என்று சர்பானா ஜூரோங் சாடியது
“கிருமி தொற்றும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு பராமரிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தன்னலமில்லாமல் பணிபுரிந்த எங்களது ஊழியர்களுக்கு அவமரியாதை அளிக்கும் விதமாக இத்தகைய குற்றச்சாட்டுகள் அமைகின்றன,” என்று அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.
தற்போதைய சவால் மிகுந்த சூழலில் திட்டத்தை நேரத்தோடு முடித்துக்கொடுக்க தனது ஊழியர்கள் பெரியளவில் தியாகம் செய்துள்ளதை அது சுட்டியது.
“எங்களது நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து கீழ்த்தரமான கருத்துகளைக் கூறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்,” என்றும் சர்பானா ஜூரோங் நிறுவனம் எச்சரித்தது.
கொவிட்-19 நோயாளிகளைத் தங்கவைக்க சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களை அமைப்பதற்கான உடனடி தேவை நிலவியதை அது சுட்டியது.
முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கின்கீழ் செயல்படும் சர்பானா ஜூரோங் உள்ளிட்ட நிறுவனங்கள் இது தொடர்பான பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக சர்பானா ஜூரோங் விவரித்தது.