சிங்கப்பூரில் மெடிஷீல்டு லைஃப் என்ற நாடளாவிய கட்டாய தேசிய சுகாதார காப்புறுதித் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், மத்திய சேம நிதி ஏற்பாடு ஆகியவை இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. அதுபோலவே மெடிஷீல்டு லைஃப் திட்டம் இல்லாத ஒரு நிலையை நினைத்துப் பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ளது என்றால் அது மிகையாகாது.
மெடிஷீல்டு லைஃப் திட்டம் அடுத்த ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு செம்மையாகத் திருத்தி அமைக்கப்பட இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு ஆகும் அதிக கட்டணங்களைச் செலுத்தவும் மேலும் பல நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஆகும் செலவை அந்தக் காப்புறுதித் திட்டத்தைக் கொண்டு ஈடு செய்யவும் தோதாகத் திட்டத்தைத் திருத்தி அமைப்பது இலக்கு.
மெடிஷீல்டு லைஃப் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு $100,000 வரை இப்போது பெற முடியும். இதை $150,000 ஆக உயர்த்துவது தெரிவிக்கப்பட்டு உள்ள யோசனைகளில் ஒன்று.
இப்படி சலுகைகள் கூடும்போது அந்தக் காப்புறுதித் திட்டத்துக்கு மக்கள் செலுத்த வேண்டிய பிரிமியம் சந்தா தொகையும் கூடும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்.
மெடிஷீல்டு லைஃப் அடுத்த ஆண்டு அதிக உதவிகளை, பலன்களைத் தரும் வகையில் செம்மையாகத் திருத்தி அமைக்கப்படும்போது அந்தத் திட்டத்திற்குச் செலுத்த வேண்டிய சந்தா தொகை 35 விழுக்காடு வரை உயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாய காப்புறுதித் திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன என்றாலும் அடுத்த ஆண்டில்தான் முதன்முதலாக சந்தா தொகை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
மெடிஷீல்டு லைஃப் திட்ட மேம்பாடு தொடர்பில் பொதுமக்களிடம் அப்படியும் இப்படியுமாக கருத்துகள் நிலவுகின்றன. அந்தத் திட்டம் அளிக்கக்கூடிய பரந்த, விரிவான ஆதரவை சிங்கப்பூரர்கள் வரவேற்கிறார்கள். அதேவேளையில், சந்தா தொகை அதிகரிப்பதால் மக்களுக்கு நிதிச் சுமை கூடிவிடுமே என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.
இதை எல்லாம் மனதில் வைத்துதான், அந்தத் திட்டம் பற்றிய பூர்வாங்க பரிந்துரைகள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை, யோசனைகளைப் பெற அரசாங்கம் விரும்புகிறது.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் கருத்துகளை, யோசனைகளை, எண்ணங்களை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
அப்படி செய்தால்தான் மக்களின் தேவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தைப் பொருத்தமானதாக, காலத்திற்கு ஏற்புடையதாகத் திருத்தி அமைக்க முடியும்.
சிங்கப்பூர் மக்களில் முன்னோடி தலைமுறையினர் இருக்கிறார்கள். மெர்டேக்கா தலைமுறையினர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஏற்கெனவே பல சுகாதார மருத்துவ மானியங்களைப் பெற்று வருகிறார்கள்.
இதற்கும் மேலாக மக்கள்தொகையில் சுமார் பாதி பேருக்கு மெடிஷீல்டு லைஃப் சந்தா தொகையில் பாதி அளவுக்குத் தொடர்ந்து மானியம் கிடைக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகையில் கணிசமான அளவினருக்கு உதவும் வகையில் நிரந்தர சந்தா தொகை தள்ளுபடிகளும் இருக்கின்றன.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, சந்தா உயர்வை சிங்கப்பூரர்கள் சமாளிக்க வேண்டும் என்பதற்காக இரண்டாண்டு காலம் அரசாங்கம் கொவிட்-19 மானியங்களையும் கொடுக்க இருக்கிறது.
கொரோனா கிருமித்தொற்று பாதிப்புகளை எல்லாம் கருத்தில் கொண்டால் இவை எல்லாம் சிங்கப்பூரர்களுக்கு கிடைக்கக்கூடிய மிக முக்கிய பண உதவிகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
போதைப் பித்து, மதுப் பித்து, உயிர்மாய்ப்புச் சம்பவங்களால் ஏற்படக்கூடிய காயங்கள் அல்லது வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய காயங்கள் ஆகியவற்றுக்கும் சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மெடிஷீல்டு லைஃப் கட்டாய காப்புறுதியில் ஏற்பாடுகள் தேவை என்றும் யோசனை முன்வைக்கப்பட்டு இருக்கிறது.
இதை சீர்தூக்கிப் பார்க்கையில் இந்த ஏற்பாடு முக்கியமானதாகவே தெரியவருகிறது.
நோயாளிகளுக்குத் தேவைப்படக்கூடிய அத்தியாவசிய ஆதரவை அளிப்பதோடு, உதவிகளை நாடும்போது மக்களுக்கு ஏற்படக்கூடிய மனச் சங்கடங்களையும் இந்த ஏற்பாடு குறைக்கும்.
போதைக்கும் மதுவுக்கும் அடிமையாவது, தனக்குத்தானே பாதகங்களைக் தேடிக்கொள்வது போன்றவை எல்லாம் மருத்துவ ரீதியில் குணப்படுத்த முடியாதவை; அவை விரும்பத்தகாத சமூக நடத்தைகள் என்ற கருத்து நிலவுமேயானால் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பது சிரமமானதாகவே இருக்கும்.
அப்படிப்பட்ட பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களை அணுகவேண்டிய விதம் காலவோட்டத்துடன் பரிணமித்து வருகிறது. இதைத்தான் இப்போது முன்வைக்கப்பட்டு உள்ள யோசனைகள் புலப்படுத்துகின்றன.
மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் தொடர்ந்து கட்டுப்படியாகக்கூடிய நிலையில் இருந்து வரவேண்டும். இதுவும் யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்புக்கு ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருவதைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் சுகாதாரப் பராமரிப்புக்கு ஆகும் செலவு ஒரு மிரட்டலாகவே உருவெடுக்கும்போல் தெரிகிறது.
இந்த மிரட்டலை நாம் சமாளித்துதான் ஆகவேண்டும். இதில் மெடிஷீல்டு லைஃப் திட்டத்தை செம்மையாகத் திருத்தி அமைக்கும் முயற்சி மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறமுடியும்.
உலகிலேயே ஆக அதிக ஆயுளைக் கொண்ட சிங்கப்பூரர்கள் தங்களுடைய சுகாதாரப் பராமரிப்பைத் தொடர்ந்து கட்டிக்காக்க எடுக்கும் முயற்சிகளுக்குத் திருத்தப்பட்ட மெடிஷீல்டு லைஃப் ஏற்பாடும் கைகொடுத்து உறுதுணையாக இருக்கும் என்பதே நம்பிக்கை.