‘அஷ்யுரன்ஸ், கேர் என்கேஜ்மெண்ட்’ (ஏசிஇ) என்ற குழுமம் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த 450,000க்கும் அதிக வெளிநாடு மற்றும் உள்நாட்டு ஊழியர்களுக்குத் தடமறியும் சாதனங்களை வழங்க இருக்கிறது.
கட்டுமானம், கப்பல் பட்டறை, உணவு பதனீட்டு தொழில்துறைகளில் வேலை பார்க்கின்ற, விடுதிகளில் தங்கி இருக்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் இவை கட்டம் கட்டமாக இம்மாதம் 18ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று இந்தக் குழுமம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் மற்றும் வேலைச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கும் இச்சாதனங்கள் கச்சிதமானவை. தண்ணீர் பட்டாலும் கெட்டுப்போகாதவை. இவற்றை எப்போதும் அணிந்துகொள்ளலாம்.
வெளிநாட்டு ஊழியர்கள் பயன்படுத்தும் கைபேசியில் இருக்கும் டிரேஸ் டுகெதர் என்ற செயலியைப் போல் இது செயல்படும்.
இவை எந்த அளவுக்குப் பலன் தருகின்றன என்பதை இந்தக் குழுமமும் பல துறைகளைச் சேர்ந்த அமைப்புகளும் பரிசோதித்து மதிப்பிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாதனம் கொவிட்-19 கிருமி பரவுவதைத் தடுப்பதில் முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் பலனளிக்கும்.
அறிவார்ந்த நகர் மற்றும் மின்னிலக்க அரசாங்க குழுமம், கட்டட, கட்டுமான ஆணையம், பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றோடும் சிங்கப்பூர் ஒப்பந்தக்காரர்கள் சங்கம் போன்ற அமைப்புகளோடும் சேர்ந்து இந்தச் சாதனங்களை ஏசிஇ குழுமம் விநியோகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி அடுத்த மாத தொடக்கத்தில் முடிவடையும். தடமறியும் சாதன விநியோகம் பற்றி முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.