முஸ்தஃபா சென்டர் முதலாளியின் உறவினர் 3ல் 1 பங்கு கேட்கிறார்

முஸ்தஃபா சென்டர் முதலாளியின் உறவினர் 3ல் 1 பங்கு கேட்கிறார்

1 mins read
51756fdb-c321-4ab6-84fe-1c913326f834
-

சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான முஸ்தஃபா சென்டர் முதலாளி முஷ்டாக் அகமதின் உறவினரான ஃபயாஸ் அகம்மது என்பவரும் அவருடைய சகோதரரான அன்சார் என்பவரும், திரு முஷ்டாக்குக்கு சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் இதர பல நாடுகளிலும் உள்ள முஸ்தஃபா தொழில் சாம்ராஜ்ஜியத்தில் மூன்றில் ஒரு பங்கு தங்களுக்கு வேண்டும் என்று கோருகிறார்கள்.

இந்த வழக்கு, திரு முஷ்டாக்குக்கும் அவருடைய குடும்பத்துக்கும் எதிராக திரு முஷ்டாக்கின் ஒன்றுவிட்ட உடன்பிறப்புகளும் அவர்களின் தாயாரும் தொடுத்துள்ள ஒரு வழக்குடன் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஃபயாஸ் அகம்மது சாட்சியம் அளித்தார். தன்னுடைய தந்தையான சம்சுதீன் முக்தார் அகம்மது, 2004ஆம் ஆண்டு ஒரு நாள், நிறுவனத்தில் தனக்கு 15.12 பாத்தியதை இருக்கிறது என்று தெரிவிக்கும் ஓர் உயிலை எழுதிவிட்டு, குழந்தைபோல் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்ததாக அவர் சாட்சியம் அளித்தார்.

மகனைப் போல் கருதி தான் வளர்த்த திரு முஷ்டாக் தன்னை ஏமாற்றிவிட்டதாக தன் தந்தை வேதனைப்பட்ட தாகவும் ஃபயாஸ் அகம்மது கூறினார். ஆனால் திரு முஷ்டாக்கின் வழக்கறிஞர் ஆல்வின் இயோ இதை ஏற்கவில்லை. ஃபயாஸ் அகம்மதின் தந்தை எழுதிவைத்த உயில் இந்த வழக்கில் ஃபயாஸ் அகம்மதுக்குச் சாதகமாக இருக்காது என்பதால் ஃபயாஸ் இட்டுக்கட்டி அப்படிச் சொல்கிறார் என்று வழக்கறிஞர் வாதிட்டார். விசாரணை தொடர்கிறது.