முதுமை காலத்திலும் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நெருங்கும் வேளையில் புக்கிட் மேராவில் உள்ள தமது வீட்டை சுயமாக சுத்தம் செய்யும் திருமதி ஜெயக்கொடிக்கு இவ்வாண்டு ஓய்வு கிடைத்துள்ளது. அவரது வீட்டு ஜன்னல்களைத் துடைத்து, கழிவறையைச் சுத்தம் செய்து, பழுதடைந்த விசிறியை அகற்றி, 73 வயது திருமதி ஜெயக்கொடியின் பாரத்தை இறக்கியுள்ளனர் சிண்டா மற்றும் இளம் சீக்கியர் சங்கத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க இளம் தொண்டூழியர்கள்.
திருமதி ஜெயக்கொடியை போல் 19 வீடுகளில் வசிக்கும் உதவி தேவைப்படுவோருக்கு சுமார் 80 தொண்டூழியர்கள் அடங்கிய குழு நேற்று மதியம் உதவிக்கரம் நீட்டியது. இதற்கு வழிவகுத்துள்ளது, ‘புரோஜெக்ட் கிவ்’ (Project Give) திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ள ‘புரோஜெக்ட் ஷைன்’ (Project Shine).
இந்தத் திட்டத்தை சிண்டா, இளம் சீக்கியர் சங்கத்துடன் இணைந்து நடத்தியது. தீபாவளியை முன்னிட்டு உதவி தேவைப்படுவோர், முக்கியமாக வயதானவர்களின், இல்லங்களுக்கு சென்று சுத்தம் செய்வதை குறிக்கோளாக கொண்டிருந்தது புரோஜெக்ட் ஷைன்.
“இந்த வீட்டில் நானும் என்னைக் கவனித்துக்கொள்ளும் பணிப்பெணும் தான் வசிக்கிறோம். வீட்டுவேலைகளை பெரும்பாலும் நானே கவனித்துக்கொள்வேன். ஆனால் எனக்கு நடக்க சிரமமானதிலிருந்து அதிகமான வேலைகளைச் செய்ய முடிவதில்லை. இந்த ஆண்டு, இளம் தொண்டூழியர்கள் எனது வீட்டுக்கு வந்து சுத்தம் செய்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. என்னைப் போன்ற முதியவர்களுக்கு இதுபோன்ற வழிகளில் உதவுவது மனதை நெகிழ்வடையச் செய்கிறது,” என்றார் திருமதி ஜெயக்கொடி.
கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்படும் புரோஜெக்ட் கிவ், நிதித் திரட்டை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. காலப்போக்கில் தேவைகள் பல்வேறு நிலைகளில் மாறியிருப்பதை அடுத்து இவ்வாண்டு நிதி திரட்டு வதற்கு அப்பால் சிங்கப்பூர் இந்திய சமுதாயத்தில் இருக்கக்கூடிய வெவ்வேறு சவால்களை நிவர்த்தி செய்வதை தனது நோக்கமாக மாற்றியிருக்கிறது சிண்டா.
“Acts of Care” என்னும் கருப்பொருளைக் கொண்டுள்ள புரோஜெக்ட் கிவ் 2020, இந்தச் சிரமமான காலகட்டத்திலும் சமூகத்தில் பின்தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு ஆதரவும் அரவணைப்பும் வழங்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது.
பல இளையர்கள் ஒருங்கிணைந்து சமூக மேம்பாட்டில் ஈடுபட்டது இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சம்.
“இந்த புரோஜெக்ட் ஷைன் திட்டத்தில் சிண்டா இளையர் குழு மற்றும் இளம் சீக்கியர் சங்கத்தைச் சேர்ந்த பல இளையர்கள் பங்குபெற்று சிறப்பு சேர்த்துள்ளனர். சிண்டாவின் பல நிகழ்ச்சிகளில் தலைமை ஏற்பதற்கு இளையர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
“இதற்குக் காரணம் என்னவென்றால், இளையர்கள் தலைமை ஏற்கும்பொழுதான் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் என்னவென்பதை புரிந்துகொள்கின்றனர். அந்த பிரச்சினைகளை கையாள்வதற்கு புதிய அணுகுமுறைகளை முன்வைத்து இன்றைய சூழலுக்கேற்ப செயல்படும் திறன்வாய்ந்தவர்களாகவும் அவர்கள் உருவெடுக்கின்றனர்.
“சிங்கப்பூர் இந்திய சமுதாயம், நமது சமுதாயம். இந்திய சமுதாயம் வரும் காலத்தில் தொடர்ந்து மற்ற சமுதாயங்களுடன் முன்னேற்றப் பாதைகளில் பயணம் செய்ய இளையர்களின் பங்கு அவசியமானது,” என்று கூறினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.
தொண்டூழியர்களில் ஒருவரான குமாரி ஹபிடா ஷா, 33, சிண்டாவில் மூன்று ஆண்டுகளாக தொண்டூழியம் செய்து வருகிறார். “இந்த முதியவர்கள் அனைவரும் எங்களுக்கு தாத்தாக்களையும் பாட்டிகளையும் போன்றவர்கள்தான். முதுமைக் காலத்தில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது மிகவும் கடினமாகியிருக்கிறது.
“எங்களால் முடிந்த வகையில் இதுபோன்ற சிறு உதவிகளைப் புரிவது எங்களது கடமையாக நான் கருதுகிறேன். அதுவும் தீபாவளி காலத்தில் அவர்களுக்கு இது உற்சாகமூட்டும் என்று நம்புகிறோம்,” என்று கூறினார் அவர்.