நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து இலங்கை, ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா, துருக்கி, ஃபின்லாந்து, எஸ்டோனியா, ஃபிஜி ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் அவர்களது வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ள இயலும்.
மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருவோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதிலிருந்து விலக்கு கோரலாம் என இன்று (அக்டோபர்) சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆனால், இங்கு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்பு, இந்தப் பட்டியல் தவிர வேறு நாடுகளுக்குச் செல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
தங்களது வசிப்பிடத்தில் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது தனியாகவோ அல்லது அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடனோ தங்கியிருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே பயண வரலாறு, பயணத் தேதி இருந்தால் மட்டுமே உடன் தங்கி இருக்கலாம்.
மார்ச் மாதம் 27ஆம் தேதிக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் தனிமைப்படுத்தல் வளாகங்களில் தங்கியிருப்பதற்கான செலவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்பதையும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.