இணையம்வழி மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் ‘ரெட்மார்ட்’ நிறுவனத்தின் 1.1 மில்லியன் பயனாளர் கணக்குகளின் தனிப்பட்ட விவரங்கள், வாடிக்கையாளர் தகவல் தளத்திலிருந்து களவாடப்பட்டு இணையத்தளம் ஒன்றில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
‘ரெட்மார்ட்’டின் உரிமையாளரான இணைய வணிக நிறுவனமான ‘லஸாடா’, பயனாளர் விவரங்கள் திருடப்பட்டதை நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியது. பயனாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரிகள், மறைச்சொற்கள், கடன் அட்டை எண்களின் ஒரு பகுதி உள்ளிட்டவை களவாடப்பட்ட விவரங்களில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்து லஸாடா தெரியப்படுத்தி வருகிறது.
“ரெட்மார்ட் கட்டமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட வாடிக்கையாளர் தகவல் தளத்தைத் தன்கைவசப்படுத்திவிட்டதாக கூறும் தனிநபர் ஒருவரை எங்களது இணையப் பாதுகாப்புக் குழு கண்டறிந்தது. அந்த ரெட்மார்ட் கட்டமைப்பு பயன்பாட்டில் இல்லை,” என்று லஸாடாவின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மின்னஞ்சல் மூலமாகவும் தனது இணையப் பக்கத்திலும் இதுகுறித்து லஸாடா தெரியப்படுத்தியது. முன்னெச்சரிக்கை கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக இந்தத் தகவல் திருட்டு கடந்த வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிய அந்நிறுவனம், தற்போதைய வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதிக்கப்படவில்லை என்று வலியுறுத்தியது.
அதிகாரமற்ற முறையில் தகவல் தளத்தை எவரும் நாடுவதற்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ள அந்நிறுவனம், தகவல் களவாடப்பட்டிருப்பது குறித்து தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடம் தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறியது. இச்சம்பவம் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் இதுகுறித்து தான் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.
பாதுகாப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை அவர்களது பயனாளர் கணக்குகளில் இருந்து லஸாடா வெளியேற்றியுள்ளது.
இந்த வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளுக்கு உள்நுழையும்போது புதிய மறைச்சொல்லை உருவாக்க கேட்டுக்கொள்ளப்படும். மறைச்சொற்களை அடிக்கடி மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடி மின்னஞ்சல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு வாடிக்கையாளர்களை லஸாடா எச்சரித்துள்ளது.
“உங்களது தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்க வாடிக்கையாளர்களிடம் லஸாடா கோராது,” என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.