சாங்கி விமான நிலைய ஆகாயப் பகுதிக்குள் சட்டவிரோதமாக ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா வானூர்தியைச் செலுத்திய 20 சம்பவங்கள் கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்துள்ளன என்றும் அந்தக் குற்றங்களைப் புரிந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்.
சாங்கி விமான நிலையத்துக்கு நேற்று வருகையளித்த திரு டியோ, கடந்த ஆண்டு நிகழ்ந்த சில சம்பவங்களுக்குப் பிறகு, ட்ரோனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வெற்றியை அளித்திருப்பதாக விவரித்தார்.
“ட்ரோனை செயலிழக்கச் செய்யும் ஆற்றல் கொண்ட சாதனத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆனால், இந்தப் பகுதி சவால்மிக்கது என்பதால் ட்ரோன் தொழில்நுட்பத்தை அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
“இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை நாம் அடைந்துள்ளோம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சாங்கி விமான நிலைய விமானச் சேவைகளுக்குப் பாதிப்பு எற்படுத்தும் வகையில் எவ்வித ஊடுருவல் சம்பவமும் நிகழவில்லை. இருப்பினும், ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்ப ஆற்றல்கள் மேம்படுத்தப்பட வேண்டும்,” என்றார் திரு டியோ.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சட்டவிரோத ட்ரோன் ஊடுருவலால் இரண்டு முறை விமானச் சேவைக்குப் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட ட்ரோனுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி மூத்த அமைச்சருக்கு நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் 18, 19ஆம் தேதிகளில் நடந்த முதலாவது சம்பவத்தில் சட்டவிரோத ட்ரோன் ஊடுருவலால் 30 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஜூன் 24 நடந்த இரண்டாவது சம்பவத்தில், சட்டவிரோத ட்ரோன் ஊடுருவலாலும் மோசமான பருவநிலையாலும் 15 விமானப் புறப்பாடு களும் வருகைகளும் தாமதிக்கப்பட்டன. ஏழு விமான சேவைகள் வேறு இடங்களுக்கு மாற்றி விடப்பட்டன.
சாங்கி விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன்களைக் கண்டறியும் ரேடார் சாதனத்தை திரு டியோ நேற்று நேரில் பார்வையிட்டார்.
“ட்ரோன் ஊடுருவல் என்பது வளர்ந்து வரும் ஒரு பிரச்சினை. அதற்குத் தீர்வு காண்பது சிரமமானது. சிங்கப்பூர் உட்பட உலகின் பல விமான நிலையங்கள் அவற்றை எதிர்கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன.
சட்டவிரோதமாக ட்ரோனை பயன்படுத்துபவர்களைக் கையாள சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட, பல அமைப்புகள் பங்கேற்கக்கூடிய அணுகுமுறை தேவை,” என்றும் வலியுறுத்தினார் திரு டியோ.