தீபாவளி கொண்டாட்டம் லிட்டில் இந்தியாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலும் களைகட்டியுள்ளது. இப்பண்டிகையைக் கொண்டாடும் விதத்தில் சாங்கி விமான நிலையத்தில் இலை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான மயில்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. சாங்கி விமான நிலையத்தின் மூன்று முனையங்களையும் மொத் தம் 14 மயில்கள் அலங்கரிக் கின்றன. இதில் பெரிய அளவிலான மயில் 4 முதல் 4.5 அடி கொண்டதாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் மயிலும் தனித்துவமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆர்க்கிட், ப்ரோமிலியட்ஸ் போன்ற வெவ்வேறு வகையான பூக்களைக் கொண்டு மட்டுமல்லாமல் மயில் தோகைகளைக் கொண்டும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. கண்கவர் வண்ணங்களைக் கொண்ட இந்த மயில்கள் விமான நிலைய பார்வையாளர்களிடையே யும் விமானப் பயணிகளிடையே யும் பெரும் வரவேற்ப்பைப் பெற்று உள்ளது. தீபாவளி பண்டிகையை மையமாகக் கொண்டு விமான நிலையத்தை அலங்கரிக்கும் இந்த மயில்களை நவம்பர் மாதம் 7ஆம் தேதி வரை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.