அதிகரித்து வரும் வீட்டு விலைகளைக் குறைக்க சிங்கப்பூர் மீண்டும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்த கருத்துகள் இதைக் காட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் சொத்துச் சந்தை, தொடர்ந்து நிலையாக இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் அதை மிக அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் திரு ஹெங் இணையம் வழி தெரிவித்தார்.
“பொருளியல் சூழல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் அரசாங்கம் தொடர்ந்து விழிப்புடன் இருந்து சொத்து விலைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும்.
“யதார்த்த பொருளியல் நிலையைக் கடந்து சொத்துச் சந்தை கட்டுக்கடங்காமல் போகக்கூடாது,” என்றார் திரு ஹெங்.
புத்தாக்கத்துடன் செயல்படும் அதே வேளையில், சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே முக்கிய இலக்கு என்பதை மறந்துவிடக்கூடாது என்று சொத்து மேம்பாட்டாளர்களுக்கு திரு ஹெங் நினைவூட்டினார்.
இளம் சிங்கப்பூரர்கள் சொந்த வீடு வாங்கக்கூடிய அளவுக்கு வீட்டு விலைகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வீடுகளைக் கட்ட நிலங்களுக்கான ஏலக் குத்தகையில் நியாயமான விலையை முன்வைக்கும்படி சொத்து மேம்பாட்டாளர்களை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாது, நிச்சயமற்ற பொருளியல் சூழல் நிலவுவதால் சொத்துகளை வாங்கும்போது கவனம் தேவை என சிங்கப்பூரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், வீட்டு விலை அதிகரிப்பைத் தணிக்கும் முயற்சி யாக முத்திரை வரித் தொகையை மாற்றி அமைத்தல், வீட்டுக் கடன்களுக்காகக் கொடுக்கப்படும் தொகையை இறுக்குவது, புதிய வீடுகளுக்கான பரப்பளவை மாற்றி அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று டிபிஎஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிங்கப்பூரில் உள்ள தனியார் வீடுகளின் விலை கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் உச்சத்தை எட்டின.
கடந்த ஆண்டில் தனியார் வீடுகளின் விலை 2.2 விழுக்காடு அதிகரித்தது.
இதற்கிடையே, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் விலை கடந்த ஆண்டு 4.8 விழுக்காடு அதிகரித்தது.
வீவக வீடுகளின் விலை 2019ஆம் ஆண்டில் 0.1 விழுக்காடு அதிகரித்தது. 2018ஆம் ஆண்டில் அது 0.9 விழுக்காடு சரிந்தது.
வீட்டு விலைகளைத் தணிக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வீடு விற்பனை குறையும் என்றபோதிலும் குறைந்த வட்டி விகிதம் போன்ற காரணங்களால் வீடுகள் தொடர்ந்து விற்கப்படும் என்று ஜெஃப்ரிஸ் நிதி குழுமத்தின் பகுப்பாய்வாளரான திரு கிருஷ்ணா குஹா தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடிநிலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நட
வடிக்கைகள், ஒட்டுமொத்த வீடுகள் விற்பனைத் திட்டம் மீண்டும் தொடங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த பத்து ஆண்டுகளாக வளர்ச்சி கண்ட வருமானம் ஆகியவை பாதிப்பைக் குறைக்கும் என்றார் அவர்.