கொவிட்-19 தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வரை உலகளாவிய பொருளியல் மீண்டு வருவது நிச்சயமற்றதாக இருக்கும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
இதனால் சில சாத்தியக்கூறுகளுக்கு அரசாங்கங்கள் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் பின்னடைவுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மிகவும் பலவீனமான நிலையில் இருப்போரைப் பாதுகாக்க தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கொவிட்-19 காரணமாக கடந்த ஆண்டில் நிச்சயமற்ற சூழல் நிலவியதாகவும் பொருளியல் நிலைகுலைந்து போகாமல் இருக்கவும் பொதுமக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்கவும் நிதி தொடர்பாக உலக நாடுகள் அதற்கு முன்பு எடுக்காத பல நடவடிக்கைகளை எடுத்தன என்றும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் கூறினார்.
“உலகளாவிய வளர்ச்சி, அல்லது தேசிய அளவிலான வளர்ச்சி குறித்து யாராலும் முன்னுரைக்க முடியாது. இதெல்லாம் கொரோனா கிருமித்தொற்று சூழலைப் பொருத்தது,” என்றார் திரு தர்மன்.
வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பாலான மக்களிடம் கொரோனா தடுப்பூசி இன்னும் சென்றவடையவில்லை என்று தெரிவித்த திரு தர்மன், இதுவே நிச்சயமற்ற நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றார்.