கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு அதிபர் ஹலிமா யாக்கோப் தமது சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சிங்கப்பூரர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரை கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்குக் கிடைத்துள்ள ஆதரவு இன்னும் மேம்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசி கிட்டியுள்ள நிலையில் கூடுதல் நம்பிக்கையுடன் சிங்கப்பூர் வரும் சீனப் புத்தாண்டின் எருது ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதாக அவர் கூறினார்.
“ஆனாலும், தடுப்பூசி இருப்பது சிக்கலைக் களைவதன் ஒரு பகுதிதான். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் முக்கிய அம்சமாகும்,” என்றார். தடுப்பூசி இருந்தாலும், பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது தொடர்ந்து நடைபெறுவது அவசியம் என்று குறிப்பிட்ட அதிபர், உடலில் எதிர்ப்புச் சக்தி உருவாகச் சில காலம் ஆகும் என்றார்.
“இச்சுகாதார நெருக்கடியை எவ்வளவு துரிதமாகத் தீர்க்கிறோமோ, அவ்வளவு விரைவாக நம் பொருளியல் மீட்சி அமையும்,” என்று அவர் சுட்டினார்.
கொரோனா கிருமி காரணத்தால் இவ்வாண்டு சீனப்புத்தாண்டைப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடுவது எவ்வளவு கடினமானது என்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் சொன்னார்.
இருப்பினும் சிங்கப்பூரர்கள் தங்களின் நெருங்கினவர்களுடன் அர்த்தமுள்ள முறையில் கொண்டாடும் வாய்ப்பாகவும் இது அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர். சீனப் புத்தாண்டுக்கு முன்தினம் இரவு நடைபெறும் ஒன்றுகூடல் விருந்து, தம்மை மிகவும் கவர்ந்த ஓர் சீனப் பாரம்பரியம் என்றும் அதிபர் ஹலிமா பகிர்ந்துகொண்டார்.
மன்னிக்கும் தருணமாகவும் பிரிந்தவர்கள் சேர்வது, குடும்பக் கொண்டாட்டமாக அமைவது போன்ற சூழலை வழங்கும் அற்புத வாய்ப்பு இந்த ஒன்றுகூடல் விருந்து என்று அவர் தெரிவித்தார். இறுதியாக சீனத்தில் ‘கொங் ஸி ஃபா சாய்’ என்ற வாழ்த்துடன் விடைபெற்றுக்கொண்டார் அதிபர் ஹலிமா.