வீடாக இருந்தாலும் நாடாக இருந்தாலும் அளவறிந்து செயல்பட வேண்டும். வீட்டுக் கணக்கைப் போலவே நாட்டுக் கணக்கையும் திறம்பட நிர்வகித்து வரும் அணுகுமுறை தொடர்ந்தால் சேமிப்பு மூலம் கையிருப்பு பலமடையும். பொருளியல் நல்ல காலத்தின்போது அந்தக் கையிருப்பைக் கூடுமானவரை தொடாமல் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருந்து மேலும் மேலும் பலப்படுத்தி வருவதுதான் விவேகமான செயல்.
செலவைவிட வருமானத்தைப் பெருக்கி, மிச்சப்படும் தொகையைச் சேமித்து வருகின்ற ஒரு போக்கு, ஒரு நாட்டின் வெற்றிக்கும் முன்னேற்றத்துக்கும் மக்களின் வளப்பத்துக்கும் மிக முக்கியமானது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அதுவும் மக்களுக்குப் பாதிப்போ சுமையோ இல்லாமல் இதைச் செய்வது, மக்கள் நலனில் நாட்டமுள்ள, மிகவும் திறமையான, அதே வேளையில் கருணைமிக்க ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு.
சிங்கப்பூர் இத்தகைய அணுகுமுறை மூலம் இவ்வளவு காலம் வெற்றிகரமான முறையில் முன்னேறி சேமிப்பை வலுவாக்கி வந்துள்ளது. இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நாட்டின் செலவினம் அதிக கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய அம்சமாக ஆகி இருக்கிறது. செலவினங்களுக்கான தேவை தாறுமாறாக கூடி வருகிறது. மக்களின் சுகாதாரச் செலவினம் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் அதிகமாகக் கூடிவிட்டது. மக்கள்தொகை மூப்படைவதால் இந்தச் செலவினம் தொடர்ந்து கணிசமாக அதிகரிக்கும் நிலையும் உள்ளது.
இதோடு, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குச் செலவு எல்லாம் சேர்ந்து அரசாங்கம் அதிகமாக செலவிடவேண்டிய தேவையைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும். இவற்றை எல்லாம் கடன் வாங்கி செய்து முடித்தால் அந்தக் கடனை மக்கள் சுமக்கவேண்டிய நிலைதான் வரும்.
இது ஒருபுறம் இருக்க, கொவிட்-19 காரணமாக நாட்டின் சுதந்திர வரலாற்றில் இல்லாதபடி படுமோச மான பொருளியல் மந்தம் ஏற்பட்டதால் அரசாங்கம் கையிருப்பில் இருந்து சேமிப்பை எடுத்து சாதனை அளவில் செலவிட்டு மக்களின் வேலைகளைக் கட்டிக்காத்ததோடு புதிய வேலைகளையும் உருவாக்கியது. நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டி, ஊழியர்களின் தேர்ச்சிகளைப் பெருக்கி எதிர்காலத்துக்கு அவர்களைத் தயார்ப்படுத்த பல்வேறு செயல்திட்டங்களை நடப்புக்குக் கொண்டு வந்தது.
இவற்றின் விளைவாக 2020 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சாதனை அளவாக 13.9% பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. அந்தப் பற்றாக்குறை 2021 நிதியாண்டில் 2.2% ஆக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் ஒவ்வோர் ஆண்டும் தாம் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் இவற்றை எல்லாம் விளக்கிச் சொல்லி செலவினத்தில்தான் ஒருமித்த கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், அரசாங்கத்துக்கு வருவாயைக் கூட்ட என்ன வழி இருக்கிறது என்று ஆராய்ந்தால் அதில் பொருளியல் வளர்ச்சிதான் மிக முக்கியமானது. ஆனால் அது உலக நிலவரங்களைச் சார்ந்து இருக்கிறது.
பொறுப்புள்ள ஒரு நாடு மக்களுக்குச் சுமை கூடாமல் தனக்கு வருவாயைப் பெருக்குவது என்பது இலேசான காரியம் அல்ல. அதுவும் உலகப் பொருளியல் அவ்வளவாக சரியில்லாமலேயே இருந்துவரும் நிலையில், இயற்கை வளங்கள் இல்லாமல் வெளி வர்த்தகத்தையே பெரிதும் சார்ந்து இருக்கும் பொருளியலைக் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அது இமாலய சவாலாக இருக்கிறது.
அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் வரிவசூல் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் மக்களில் பெரும் பாலானோர் தனிநபர் வருமான வரி செலுத்துவதில்லை என்பதால் அந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவுக்கு இருக்காது. நிறுவனங்களுக்கான வரியை, அவற்றின் போட்டித்திறன் பாதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தவும் முடியாது. இப்போது நடப்பில் இருக்கும் சிங்கப்பூரின் வரிவருவாய் ஏற்பாடு செம்மையான ஒன்று. சென்ற ஆண்டைப் பார்க்கையில், வசூலான வரியில் 56% சிங்கப்பூர் குடும்பங்களில் அதிக வருமானம் உள்ள முதல் 20 விழுக்காட்டினர் செலுத்தியது. அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து பெற்ற நன்மைகள் 11%. வசூலான மொத்த வரியில் 9%ஐ அடித்தட்டில் இருப்போர் செலுத்தினர். இவர்கள் பெற்ற நன்மைகள் 27% ஆக இருந்தது.
உலகின் பல நாடுகளைப் போலவே சிங்கப்பூர் மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கும் பெறுகின்ற சேவைகளுக்கும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியைச் செலுத்தி வருகிறார்கள்.
‘பொருளியல் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்’ என்ற உலகளாவிய அமைப்பின் சராசரி ஜிஎஸ்டி வரி 19% என்றாலும்கூட சிங்கப்பூரில் இந்த வரியின் அளவு பல ஆண்டுகாலமாகவே 7% ஆகத்தான் இருந்து வருகிறது. அரசாங்கத்தின் நடைமுறை வருவாயில் இப்போது ஏறத்தாழ 15%க்கு இந்த வரி பொறுப்பு வகிக்கிறது. ஜிஎஸ்டி வரி ஏற்பாடு எல்லா மக்களையும் உள்ளடக்கிய பரவலான ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருவாயைப் பெருக்க வேண்டிய இப்போதைய சூழலில், ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதே அரசுக்கு மிகவும் பொருத்தமான, தவிர்க்க இயலாததாக இருக்கும் என்று கணிக்க முடிகிறது.
இந்த வரியை 2021க்கும் 2025க்கும் இடையில் 9% ஆகக் கூட்ட வேண்டி இருக்கும் என்று 2018 ஆம் ஆண்டிலேயே நிதி அமைச்சர் கோடிகாட்டினார். ஆனால் கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டில் வரியை உயர்த்த முடியவில்லை.
வேறு வழி இன்றி இந்த வரியை உயர்த்தவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை நிதி அமைச்சர் இப்போது கோடிகாட்டி இருக்கிறார். இந்த ஆண்டில் 4% முதல் 6% வரை பொருளியல் வளரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அரசு முன்னுரைத்து இருக்கிறது.
இது கைகூடி வரும் நிலையில், அநேகமாக அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் ஜிஎஸ்டி உயர்வு இருக்கக்கூடும் என்று கணிக்க இடம் உண்டு.
வரி உயர்ந்தாலும் அதனால் பெரும்பாலான குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு $6 பில்லியன் உத்திரவாதத் திட்டம் ஏற்கெனவே நடப்பில் உள்ளது.
வரி உயரும்போது அதற்கேற்ப உயர்த்தப்படும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளும் ஜிஎஸ்டி சுமையை மேலும் குறைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.