மலேசியாவில் தடுப்பூசி போடும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள மூத்த குடிமக்களிடம் அதற்கான வரவேற்பு எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுதி வந்தது முதல் ஒரு மாத காலத்திற்கும் மேலாக 500,000 முன்களப் பணியாளர்களுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய மூத்த குடிமக்களுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த இரண்டாம் கட்டம் நெருங்கி வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பதிவு செய்துகொள்ள மூத்தோர் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவில் சுமார் 9.4 மில்லியன் மூத்த குடிமக்கள் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 30 விழுக்காடு. கிருமித்தொற்றுக்கு ஆளாகக் கூடிய அபாயம் அதிகம் என்பதால் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பதிவை கைபேசிச் செயலி வழியாகவும் இணையம் வழியாகவும் செய்துகொள்ளலாம். ஆனால் போதுமான இணைய வசதி இல்லாததும் எப்படிப் பதிவு செய்வது என்று தெரியாத நிலையும் பதிவில் சுணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, மிகவும் முன்னேறிய மாநிலமான சிலாங்கூரில் உள்ள 90 விழுக்காடு மூத்த குடிமக்கள் இன்னும் தடுப்பூசிக்குப் பதிவு செய்துகொள்ளவில்லை என இரு நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பதிவுக்கு முன்வருவோரும் உள்ளனர். அவர்களில் ஒருவரான குமாரசாமி சுப்பையா, 74, என்னும் சிலாங்கூர் குடியிருப்பாளர், பயத்துடன் வாழ விரும்பவில்லை என்பதால் தடுப்பூசிக்குப் பதிவு செய்துகொண்டதாக நேற்று முன்தினம் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தியாளரிடம் கூறினார்.
தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து பயப்படுவதால் பெரும்பாலான மூத்த குடிமக்கள் அதற்காகப் பதிவுசெய்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
அவர்கள் முன்வராதபட்சத்தில் பொருளியல் முன்களப் பணியாளர்கள் இரண்டாம்கட்ட தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உற்பத்தி, கட்டுமானம், விமானப் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற பொருளியலுக்குத் துணைபுரியும் துறைகளின் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படக்கூடும் என ‘கோட்புளூ’ என்னும் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் இணைய வாசல் குறிப்பிட்டுள்ளது.