கிருமித்தொற்று சூழல் சீராகி வரும் நிலையில் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் சங்கம் (லிஷா) நடத்தும் இந்திய புத்தாண்டு, சித்திரை விழா கொண்டாட்டங்கள் மொத்தம் 10 நிகழ்ச்சிகளுடன் இவ்வாண்டு திரும்புகிறது.
கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு காலகட்டத்தில் கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் செயல்பாட்டில் இருந்ததினால் 2010ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த விழா ரத்து செய்யப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழர், பெரனக்கான் இந்தியர்கள், இலங்கைத் தமிழர், தெலுங்கு, சீக்கியர் போன்ற 16 இந்திய இன பிரிவுகளைச் சேர்ந்த பங்காளிகள் கைகொடுக்கும் இந்த விழா, இம்மாதம் 12ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை நடைபெறும்.
“இந்த விழாவை ஒரு கடினமான கிருமித்தொற்றுச் சூழலில் ஏற்பாடு செய்கிறோம்.
“சித்திரைப் புத்தாண்டு விழாவை நிறைய மாற்றங்களுடன் நடத்த ஏற்பாட்டுக் குழு தீவிரமாக பல முயற்சிகளை எடுக்கிறது,” என்றார் லிஷாவின் தலைவர் திரு சி. சங்கரநாதன்.
ஏப்ரல் 12 முதல் 16ஆம் தேதி வரை பிஜிபி மண்டபத்தில் நடக்கும் சிறப்புக் கண்காட்சி இவ்வாண்டு விழாவில் ஒரு முக்கிய அம்சம்.
மூன்று முக்கிய பிரிவுகளும் நான்கு நேரடி நடவடிக்கைகளும் கொண்ட இந்தக் கண்காட்சி, பலவித இந்தியர்களின் கலாசாரம், கொண்டாட்ட முறைகள், வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கும்.
காலை 10 முதல் நண்பகல் 12 மணி, மாலை 5 முதல் 6 மணி வரை ஆகிய இரண்டு கால நேரங்களில் பொதுமக்களுக்குக் கண்காட்சி திறக்கப்படும்.
பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் வரலாம்.
விழாவின் அதிகாரபூர்வ திறப்பு விழா ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெறும்.
சிறப்பு விருந்தினராக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கலந்துகொள்வார்.
‘அதிபர் சவால்’ என்ற நன்கொடைத் திரட்டு முயற்சியில் திரட்டப்படும் நன்கொடைகளை அதிபரின் சார்பாக அமைச்சர் இந்திராணி அந்த நிகழ்ச்சியில் பெற்றுக்கொள்வார்.
மறுநாள் 15ஆம் தேதி அன்று தமிழ்மொழி விழாவை ஒட்டி சித்திரைப் புத்தாண்டு விழா நடத்தப்படுகிறது. கவிஞர் வாலியின் படைப்புகளை மையமாகக் கொண்டு இவ்விழா நடக்கும்.
‘ஷியோக் சுவை’ என்ற ஐந்து வித உணவகங்கள் நடத்தும் உணவைச் சுவைக்கும் நிகழ்ச்சி, புதையல் வேட்டை, மாம்பழ விழா, அட்சய திருதியை போன்ற மற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இதற்கிடையே விழாவை ஒட்டி திருவள்ளுவர், திருக்குறள்கள் சார்ந்த பதாகைகள் சிராங்கூன் சாலையை அலங்கரிக்கும்.
சாலை விளக்குகளில் இந்திய அலங்காரங்களும் அமைக்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தெரி
வித்தது.
இவ்வாண்டு விழாவில் பங்கேற்கும் அனைத்துக் கலைஞர்களும் போட்டிக்கான நிதிபதிகளும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டினார் லிஷாவின் துணைச் செயலாளர் திரு மு.பிரகாஷ்.
“21 ஆண்டுகளாக இயங்கும் லிஷா அமைப்பு ஆயிரக்கணக்கானவர்களை நிகழ்ச்சிகளில் ஈடு
படுத்தியுள்ளது.
“லிட்டில் இந்தியா வட்டாரத்தைத் துடிப்பாக வைத்திருக்கவும் சமூகத்தை ஒன்றிணைக்கவும் இந்த நிகழ்வுகளை நடத்துகிறோம். இந்த விழா லிஷாவிற்கும் சமூகப் பங்காளிகளுக்கும் முக்கியம்,” என்றார் லிஷாவின் ஆலோசகர் திரு ராஜகுமார் சந்திரா.
இணையம் மூலமாகவும் நேரடி யாகவும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.
நேரடியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மக்கள் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம் என்றும் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழு வலியுறுத்தியது.
பதிவு செய்யவும் விழா குறித்த முழு விவரங்களுக்கும் www.littleindia.com.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.