புக்கிட் மேரா, ரெட்ஹில் வட்டாரங்களில் உள்ள சில பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்களுக்கான இலவச ஆண்டிஜன் விரைவுப் பரிசோதனைக் கருவிகளை நேற்று பெற்றுக்கொண்டனர்.
அவர்களின் அக்கம்பக்கங்களில் உள்ள வசிப்போர் குழு அலுவலகங்களில் அவற்றின் விநியோகம் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. கருவிகளின் விநியோகம் இன்றும் நடைபெறும்.
ஒவ்வொரு குடியிருப்பாளரும் ஒரு பரிசோதனைத் தொகுப்பைப் பெறுவார். அதில் இரு சுய பரிசோதனைக் கருவிகள் இருக்கும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும், இந்த சுய பரிசோதனைக் கருவிகள் புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அடையாளம் காட்டும்.
அதன் மூலம் கிருமிப் பரவல் மேலும் மோசமாகாமல் தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
புக்கிட் மேரா, ரெட்ஹில் வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கிருமி பரிசோதனை நடவடிக்கைகளுக்கு மேலாக இந்தப் புதிய சுய பரிசோதனைக் கருவிகள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
புக்கிட் மேரா வட்டாரத்தில் இந்த மாதம் பல்வேறு கிருமித்தொற்றுக் குழுமங்கள் தோன்றின.
அவற்றில் ஆகப் பெரியது புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையம் தொடர்பானது. அதில் நேற்று முன்தினம் வரை 87 கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
மக்கள் கழகத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு அந்த வட்டாரங்களில் உள்ள 100 இடங்களில் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் சுய பரிசோதனைக் கருவிகளை விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.
பரிசோதனைக் கருவிகளைப் பெற்றுக்கொள்ள வந்த மூத்த குடியிருப்பாளர்களுக்கு அதைப் பயன்படுத்தும் முறை பற்றி, பயிற்சி பெற்ற மக்கள் கழக ஊழியர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.