அமைச்சர்: கொவிட்-19 காலத்தில் இத்தகைய திட்டங்களுக்குத் தேவை கூடி உள்ளது
கொவிட்-19 சூழல் இருந்தாலும், வாழ்க்கை சுறுசுறுப்பாக பலனளிப் பதாகத் தொடரும் வகையில் தங்கள் அக்கம்பக்கங்களில் புதுப்புது செயல்திட்டங்களை நடப்புக்குக் கொண்டுவந்து அதன் மூலம் குடியிருப்பாளர்கள் சுற்றுப்புறத்தில் ஈடுபாடுகொள்ள ஊக்குவிக்க 'உயிரோட்டமிக்க வாழ்விட சவால்' என்ற திட்டம் நடப்பில் உள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அந்தத் திட்டம் 2016ல் தொடங்கியது. அதன் கீழ் சென்ற ஆண்டில் ஏறத்தாழ 650 பேர் எட்டு நகர்களில் 60 செயல்திட்டங்களைத் தொடங்கினார்கள்.
புக்கிட் பாஞ்சாங்கில் வளர்ப்புப் பிராணிகளுக்கான பயிற்சி போதனை, தோ பாயோவில் உட்புற தோட்டக் கலை மையம் மற்றும் கலைக்கூடம், பன்னிரண்டு வகை சாப்பாடுகளைச் சமைப்பது எப்படி என்ற விவரங்களுடன் கூடிய நாட்காட்டி போன்றவை அத்தகைய திட்டங்களில் அடங்கும்.
அந்தத் திட்டத்திற்காக அடுத்த சில ஆண்டுகளில் மேலும் $1.5 மில்லியன் ஒதுக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று அறிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இச்சூழலில் சமூகத் திட்டங்களின் முக்கியத்துவம் கூடி இருக்கிறது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, 2016 முதல் $800,000க்கும் மேற்பட்ட தொகை அத்தகைய 170க்கும் அதிகமான திட்டங்களுக்காக செலவிடப்பட்டு உள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
அத்தகைய திட்டங்கள் நாடு முழுவதும் வீவக நகர்களைத் தொடர்ந்து பயனுள்ள முறையில் பயன்படுத்தும் என்று தான் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் வீவக சமூக வாரத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
சமூக வாரம் இந்த ஆண்டில் முதன்முதலாக மெய்நிகர் வழியில் தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நடக்கும் அந்த நிகழ்ச்சியில், தான் நிதி அளித்து உதவிய சமூகத் திட்டங்களை கழகம் காட்சிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
வீடுகளில் பழுது நீக்கும் பணிகளைச் சொந்தமாகச் செய்வது, காகித அலங்காரம் போன்றவற்றைப் போதிக்கும் மெய்நிகர் பயிலரங்குகளும் இடம்பெறும்.