அறப்பணி இணையத்தளத்தில் எத்தகைய தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க, சிங்கப்பூரின் நன்கொடை அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்கள், அறநிறுவனத்தார் போன்றோர் நன்கொடை வழங்கும்போது அவர்களுக்குச் சரியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை இது உறுதிசெய்யும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று கூறினார்.
சிங்கப்பூர் அரசாங்க அமைப்பின் இணையத்தளமாக இது செயல்படும். நன்கொடை அமைப்புகளுக்காக வளங்களை ஒருங்கிணைப்பதுடன் அந்த அமைப்புகளின் வருடாந்திர அறிக்கைகள், நிதித் தகவல்கள் போன்றவற்றை மக்கள் அறிந்திடவும் இத்தளம் அனுமதிக்கும்.
அறப்பணி இணையத்தளத்தில் அறநிறுவனங்களுக்கு உரிமையான பக்கங்களில் அவற்றின் அடிப்படைத் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு கடந்த ஆண்டு தெரிவித்தது. இது அறப்பணிப் பிரிவின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்று கூறப்பட்டது.
அறப்பணி ஆளுமை மாநாட்டில் கலந்துகொண்டபோது திரு டோங் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்வில் கிட்டத்தட்ட 700 பங்கேற்பாளர்கள் இணையம்வழி இணைந்தனர்.