சிங்கப்பூரில் உள்ள விமானத் துறை நிறுவனங்கள் அடுத்த ஈராண்டுகளில் சுமார் 1,000 பேரை வேலைக்கு எடுக்கும் என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார். மின்னிலக்கச் சேவைகள், தானியக்க தொழில்நுட்ப முறைகள் உள்ளிட்ட அம்சங்களின் தொடர்பில் இவ்வேலைகள் அமையும்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் பயணத் தடைகளும் எல்லைக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால் வர்த்தகப் பயணத்துக்கான தேவை கணிசமாகக் குறைந்ததை மனிதவள அமைச்சருமான டாக்டர் டான் குறிப்பிட்டார். வர்த்தகப் பயணத் துறைக்குத் தூண்டுகோலாக இருக்கும் விமானத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இருந்தாலும் விமானத் துறை செயல்பட சிங்கப்பூர் தொடர்ந்து வலுவான ஒரு தளமாக இருந்து வருவதை அமைச்சர் சுட்டினார். வளர்ச்சியடைய நிறுவனங்கள் புதிய பாதைகளை ஆராய்ந்து வருவதாகவும் மூன்றாவது முறையாக நடைபெற்ற விமானத் துறை தின நிகழ்ச்சியில் அவர் சொன்னார்.
இதன் தொடர்பில் சிங்கப்பூரில் உள்ள விமானத் துறை நிறுவனங்கள் ஆற்றல் உள்ளவர்களை வேலைக்கு எடுக்கும் எண்ணம் கொண்டுள்ளதாக டாக்டர் டான் சுட்டினார். பழுது பார்ப்பது, மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு 'பிராட் அண்ட் விட்னி' நிறுவனம் 250 ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை உதாரணமாக அவர் எடுத்துக் காட்டினார்.
மின்னிலக்கச் சேவைகள், தானியக்க விமானச் செயல்முறைகள், நீடித்த நிலைத்தன்மை அம்சத்தைக் கொண்ட விமானத்தைச் செலுத்தும் முறை ஆகிய மூன்றிலும் நீண்ட கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருப்பதை டாக்டர் டான் எடுத்துச் சொன்னார். உதாரணமாக விமானம் சரியாக இயங்கும் நிலையில் இருக்கிறதா போன்றவற்றைக் கணிக்க 'ஏர்பஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் மின்னிலக்கச் சேவைகளை வளர்க்கின்றன.
'ஜேடிசி' மற்றும் அதன் பங்காளி நிறுவனங்களும் அமைப்புகளும் விமானத் துறை தினம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. 1,800 மாணவர்களையும் வேலை தேடுவோரையும் நிகழ்ச்சி ஈர்த்ததாக 'ஜேடிசி' தெரிவித்தது. சம்பந்தப்பட்ட திறன் கொண்டவர்களை விமானத் துறை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க நிகழ்ச்சி வகைசெய்கிறது.
இவ்வாண்டிறுதியில் 'சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்' எனப்படும் சிலேத்தார் விமானத் துறைப் பூங்காவில் உள்ள இத்துறை சார்ந்த நிறுவனங்கள் மாணவர்களுக்குச் சுற்றிக் காட்டப்படும். அது குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.