குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சந்தேக நபரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி வெங்கடேஷ் ராஜ் நைனார் நாகராஜன் (படம்) அடித்துத் துன்புறுத்தியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் வெங்கடேஷ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து வெங்கடேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி யில் மலேசியரான சிவபாலன் கன்னியப்பனிடம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி வெங்கடேஷ் அவரை அடித்துத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்ட சிவபாலனுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனையும் 13 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதியன்று பிற்பகல் 3.40 மணி அளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்த சிவபாலனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிவபாலன் ஓட்டிய மோட்டார் சைக்கிளின்
பெட்டிக்குள் இருந்த நீல பொட்டலத்தில் போதைப்பொருள் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உட்லண்ட்ஸ் குழுவிடம் சிவபாலன் ஒப்படைக்கப்பட்டார். தமது மோட்டார் சைக்கிள் பெட்டிக்குள் போதைப்பொருள் இருப்பது தமக்குத் தெரியாது என்றும் தமது நண்பரிடம் தமது மோட்டார் சைக்கிளைக் கொடுத்திருந்ததாகவும் சிவபாலன் வாக்குமூலம் தந்தார்.
சிவபாலனிடம் தமிழில் விசாரணை நடத்த வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். விசாரணை நடத்தியபோது வெங்கடேஷ் மீது மது வாடை அடித்ததாக சிவபாலன் கூறினார். இருவரும் கழிவறைக்குச் சென்றதாகவும் அங்கு சிவபாலனிடம் வெங்கடேஷ் பேசத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிவபாலனிடம் வெங்கடேஷ் முதலில் கனிவுடன் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பாக சிவபாலன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வெங்கடேஷ் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
வெங்கடேஷ் அடித்துத் துன்
புறுத்தியதில் சிவபாலன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவ்வாறு சிவபாலனை வெங்கடேஷ் மூன்று முறை அடித்துத் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
சிவபாலனை மருத்துவர் பரிசோதித்துப் பார்த்தபோது அவருக்கு ஏற்பட்ட கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், சிவபாலனிடம் கடுமையாக நடந்துகொண்ட
போதிலும் அவரை வெங்கடேஷ் அடிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். வெங்கடேஷுக்கு எதிராக அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கடேஷ் மீதான மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.