ஈராண்டுகளாக வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் நீடித்த முடக்கநிலையால் ஏற்பட்ட மன உளைச்சலை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போல இவ்வாண்டின் தொழிலாளர் தினக் கொண்டாட்டம் அமைந்ததாக தங்குவிடுதிவாசிகள் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
ஜூரோங் வட்டாரத்திலுள்ள வெஸ்ட்லைட் பாபான் தங்குவிடுதியில் நேற்று தொழிலாளர் தினத்தன்று விடுப்பில் இருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்குக் காலையில் கலைநிகழ்ச்சியும் உணவு விநியோகமும் ஏற்பாடு செய்யப்பட்டன. போட்டி அங்கங்களுடன் மேடை நிகழ்ச்சி, 200 பேருக்கு இலவச முடி திருத்தும் சேவை ஆகியவை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் 600 மதிய உணவுப் பொட்டலங்களும் அவர்களுக்குத் தரப்பட்டன.
ஆண்டு முழுவதும் உழைக்கும் ஊழியர்களை இத்தகைய நிகழ்ச்சிகள் பெருமைப்படுத்துவதாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான மேற்பார்வையாளர் செல்வமுருகன், 33, தெரிவித்தார்.
தங்களுக்கான இந்த தினத்தைத் தங்குவிடுதி இவ்வளவு விமரிசையாகக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார் புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமன் காடப்பன்,35.
இந்த ஏற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் மகேந்திரகுமார், 37, இவ்வாண்டு மன உளைச்சல் குறைந்துள்ளதாகக் கூறினார்.
இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த நொவினா தேவாலயத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக தங்குவிடுதி நடத்துநர்கள் தமிழ் முரசிடம் கூறியுள்ளனர்.