வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) மறுவிற்பனை வீட்டு விலைகள் 22வது மாதமாக உயர்ந்துள்ளன.
ஏப்ரல் மாத நிலவரப்படி, வீவக வீடுகளுக்கான தேவை அதிகரித்ததால் வீட்டு விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
பின்னக்கல்@டக்ஸ்டனில் உள்ள நான்கறை வீடு ஒன்று, இதுவரை மறுவிற்பனையான ஆக அதிக விலையுடைய நான்கறை வீடாகும். இந்த வீடு 1.228 மில்லியன் வெள்ளிக்கு மறுவிற்பனை ஆகியுள்ளது.
இதே குடியிருப்பு வளாகத்தில் ஐந்தறை வீடு ஒன்றும் இதே விலைக்கு விற்பனையானது. இவ்விரண்டு வீடுகளும் மாதத்தில் ஆக அதிக விலையில் பரிவர்த்தனை செய்யப்பட்ட மறுவிற்பனை வீடுகள் என அறியப்படுகிறது.
வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் கடந்த மாதம் 1.1% உயர்ந்தன.
மார்ச் மாதம் பதிவான 0.7 விழுக்காட்டைக் காட்டிலும் ஏப்ரலில் சற்று துரிதமான வளர்ச்சி காணப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஏப்ரலில் விலை 11.9% ஏற்றம் கண்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
'பின்னக்கல்@டக்ஸ்டன்' நான்கறை வீட்டின் மறுவிற்பனை விலை புதிய சாதனை படைத்துள்ள நிலையில் இதற்குமுன் மார்ச் மாதத்தில் அதே கட்டடத்தில் இதைவிட உயரமான மாடியில் அமைந்திருந்த வேறொரு நான்கறை வீடு $1.21 மில்லியனுக்கு விலை போனதே சாதனையாக இருந்து வந்தது.
இதற்கிடையே, முதிர்ச்சியடைந்த குடியிருப்பு வட்டாரங்களிலும் முதிர்ச்சியடையாத குடியிருப்பு வட்டாரங்களிலும் வீட்டு விலை அதிகரித்திருந்ததைக் காண முடிந்தது.
முதிர்ச்சியடைந்த வட்டாரங்களில் வீட்டு விலை 1% உயர்ந்தது. முதிர்ச்சியடையா வட்டாரங்களில் 1.2% உயர்வு காணப்பட்டது.
இந்நிலையில் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் மறுவிற்பனையான வீடுகளின் எண்ணிக்கை 0.2% அதிகரித்திருந்தது. மொத்தம் 2,273 வீடுகள் ஏப்ரலில் கைமாறின.
அத்துடன் கடந்த மாதம் 22 வீவக மறுவிற்பனை வீடுகள் குறைந்தது $1 மில்லியனுக்குக் கைமாறின. இவற்றில் ஐந்து வீடுகள் மத்தியப் பகுதியிலும் ஐந்து வீடுகள் கிளமெண்டியிலும் உள்ள வீடுகள் ஆகும்.
பொருளாதார நிச்சயமற்ற சூழல், உயரும் பணவீக்கம், சொத்து வரி மற்றும் வட்டி விகித உயர்வு ஆகியவற்றால் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் (பிடிஓ) கட்டுமானப் பணிகள் தாமதமாகலாம்.
அதனால் தங்கள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை அக்குறிப்பிட்ட வீடுகளை வாங்கியவர்கள் வரும் மாதங்களில் அதிக வாடகை தர நேரிடலாம்.