'எஸ்டி என்ஜினியரிங்' நிறுவனம், குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு' அறநிதிக்காக 13,000 வெள்ளியைத் திரட்டி உள்ளது.
ஊழியர்களுக்கு டி-சட்டையை வழங்கி இந்த அறநிதிக்கு நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொண்டதாக நிறுவனம் கூறியது.
சென்ற மாதம் 13, 14 ஆகிய தேதிகளில் இந்த நன்கொடைத் திரட்டு நடத்தப்பட்டது. ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய ஊழியர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் 'எஸ்டி என்ஜினியரிங்' இயக்கத்தை ஒட்டி இவ்வாறு நன்கொடை திரட்டப்பட்டது.
நான்கு வாரங்களுக்கு இடம்பெற்ற இந்த இயக்கத்தின்கீழ், 5,000 டி-சட்டைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
மூன்று வடிவங்களில் அமைந்திருந்த இந்த டி-சட்டைகளில், நற்செயல்களில் ஈடுபடும்படியும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றும்படியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் வாசகங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.
முன்னதாக, இந்த ஆண்டுத் தொடக்கத்தில், மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களின் விற்பனை மூலம் 'எஸ்டி என்ஜினியரிங்' நிறுவனம் 108,000 வெள்ளியைத் திரட்டி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு' அறநிதிக்கு நன்கொடையாக வழங்கியது.
2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறநிதியின் மூலம் இதுவரை, குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த 200,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலனடைந்துள்ளனர்.