வண்ணமயமான இறகுகளைக் கொண்ட மாண்டரின் வாத்து கிளமெண்டி பகுதியில் வாரயிறுதியில் பறவை ஆர்வலர்களின் கண்களில் சிக்கியது.
கிளமெண்டி அவென்யூ 2, புளோக் 349க்குப் பக்கத்தில் உள்ள கால்வாயில் சனி்க்கிழமையன்று முதலில் தென்பட்ட அந்தப் பறவையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. பின்னர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பதிவுகள் அந்த வாத்து உலு பாண்டானில் உள்ள கால்வாயில் இருந்ததைக் காட்டியது.
உலகின் மிகவும் அழகான வாத்துகளாக மாண்டரின் வாத்துகள் கருதப்படுகின்றன. சனிக்கிழமையன்று தென்பட்டது ஆண் வாத்து என்று அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் வைத்து பறவை ஆர்வலர்கள் கூறினர்.
“ஆண் வாத்துகளில் உள்ள வண்ணங்கள் பளிச்சென்று தெரியும். அது மே மாதத்தில் தொடங்கும் இனப்பெருக்க காலத்தில் பெண் வாத்துகளைக் கவரும் முயற்சியில் ஈடுபடும்,” என்றார் சிங்கப்பூர் இயற்கைச் சங்கத்தின் பறவைக் குழுவின் உறுப்பினர் எலன் ஆவ்யோங்.
“இந்தப் பறவை சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டதல்ல. பொதுவாக சீனா, ஜப்பான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் இது காணப்படுகிறது என்று திரு ஆவ்யோங் கூறினார். இந்த பறவை அதன் அழகு காரணமாக பிரிட்டன் போன்ற பிற இடங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆனால் இங்குள்ள வெப்பமான வானிலை இந்த மாண்டரின் வாத்துகளுக்கு ஏற்றதாக இருக்காது, ஏனெனில் அவை குளிர்ச்சியான மிதமான காலநிலை கொண்ட நாடுகளைச் சேர்ந்தவை.
ஆசிய மாண்டரின் வாத்துகள் புலம்பெயர்ந்தவை என்றும் கிழக்கு சீனா மற்றும் தெற்கு ஜப்பானில் குளிர்ந்த குளிர்காலத்தைக் கழிப்பதாக அறியப்படுகிறது.