குறைந்த சேவை, உணவு விலையேற்றம் ஆகியவை இருந்தபோதும், கணிப்புகளை முறியடித்து பயனீட்டாளர் வாங்கும் பொருள்களின் விலை ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளது.
எனினும் வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் மூலாதாரப் பணவீக்கம் பிப்ரவரியில் கூடும் என எச்சரித்துள்ளன. சில கணிப்பாளர்களும் இவ்வாறே தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தரவுகளின்படி, இங்குள்ள குடும்பங்களின் செலவுகளை மேலும் சரியாகப் பிரதிபலிக்க தனியார் போக்குவரத்து, தங்குமிட செலவுகளை தவிர்த்து ஆண்டு அடிப்படையில் மூலாதாரப் பணவீக்கம் ஜனவரியில் 3.1 விழுக்காடாக இருந்தது. இது பொருளியல் வல்லுநர்களின் ராய்ட்டர்ஸ் கணக்கெடுப்பின் 3.6% முன்னுரைப்பைவிட குறைவு.
பொருள், சேவை வரி 2023 டிசம்பரில் 8 விழுக்காட்டிலிருந்து 2024 ஜனவரியில் 9 விழுக்காடாக அதிகரித்த போதிலும் பணவீக்கம் குறைந்துள்ளது.
சேவைகள், உணவு விலைகளின் மெதுவான வளர்ச்சி காரணமாக ஜனவரி மாதக் குறியீடு, டிசம்பரின் 3.3 விழுக்காட்டைவிட சற்று குறைவாக உள்ளது.
ஒட்டுமொத்த பணவீக்கம், டிசம்பரின் 3.7 விழுக்காட்டிலிருந்து ஜனவரியில் ஆண்டு அடிப்படையில் 2.9 விழுக்காட்டாகச் சரிந்து, ராய்ட்டர்சின் 3.8% எனும் முன்னுரைப்பை முறியடித்தது.
தங்குமிடம், தனியார் போக்குவரத்து இரண்டிலும் ஏற்பட்ட சரிவால் ஒட்டுமொத்த பயனீட்டாளர் விலைக் குறியீடு குறைந்துள்ளது.
சீனப் புத்தாண்டு காரணமாக பிப்ரவரியின் மூலதாரப் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் தெரிவித்துள்ளன.
“இறக்குமதி செலவு அழுத்தங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாலும் உள்நாட்டு ஊழியர் சந்தையின் இறுக்கமானதன்மை தளர்த்தப்படுவதாலும் மூலதாரப் பணவீக்கம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் படிப்படியான மிதமான போக்குக்கு வர வேண்டும்,” என்று அவை குறிப்பிட்டன.
பொருள் சேவை வரி, கார்பன் வரி, பிற நிர்வாக விலைகளின் உயர்வைக் கருத்தில்கொள்ளும்போது, ஜனவரி மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் “எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது,” என்று மே பேங்க்கின் பொருளியல் நிபுணர் சுவா ஹக் பின் கூறினார்.
“ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் கூட்டு சராசரி பணவீக்கத்தைப் பார்க்கும்போது, பணவீக்க அழுத்தங்கள் உண்மையில் இவ்வளவு விரைவாக தளர்கிறதா என்பது குறித்து மிகவும் நம்பகமான மதிப்பீட்டை வழங்க முடியும்,” என்று டாக்டர் சுவா கூறினார்.
2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கடந்த ஜனவரி மாதம்தான் மூலாதாரப் பணவீக்கம் மிகக் குறைந்துள்ளது என்று டிபிஎஸ் வங்கியின் பொருளியல் வல்லுநர் சுவா ஹான் டெங் குறிப்பிட்டார்.
பிப்ரவரியில் மூலாதாரப் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். சீனப் புத்தாண்டு காரணமாக ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் விலை அதிகரித்த அம்சங்களில் உணவும் ஒன்று என்றார் அவர்.
நிர்வகிக்கக்கூடிய உலகப் பொருள்களின் விலைகள், தற்போதைய சிங்கப்பூர் வெள்ளியின் பலம், உள்நாட்டுச் செலவு குறைதல் போன்றவை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம் கட்டுப்படுத்தப்படுவதால், மூலாதாரப் பணவீக்கம் 2023ஐ விட 2024ல் சராசரியாக குறையும் என்று திரு சுவா கருதுகிறார்.
முன்னதாக பிப்ரவரி மாதத்தில், சிங்கப்பூர் நாணய ஆணையம் 2024ன் ஒட்டுமொத்த பணவீக்க மதிப்பீட்டை 2.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாகக் குறைத்தது, இது முந்தைய கணிப்பான 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைந்தது.
2024ற்கான சராசரியாக 2.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடு எனும் மூலாதாரப் பணவீக்கம் முன்னுரைப்பை அது மாற்றவில்லை.
மாத அடிப்படையில் ஜனவரி மாத மூலாதார பயனீட்டாளர் விலைகள், 1 விழுக்காட்டு ஜிஎஸ்டி விகித அதிகரிப்பு காரணமாக 0.6 விழுக்காடு உயர்ந்தன
எனினும், மாத அடிப்படையில் குறைந்த தங்குமிடம், தனியார் போக்குவரத்துச் செலவுகள் காரணமாக ஒட்டுமொத்தப் பணவீக்கம் 0.7 விழுக்காடு சரிந்தது.
மின்சாரம், எரிவாயுச் செலவு டிசம்பரில் 1.3 விழுக்காட்டிலிருந்து ஜனவரியில் 5.3 விழுக்காடாக உயர்ந்தது என்றும், இதற்கு கட்டண உயர்வே காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில்லறை மற்றும் பிற பொருட்களுக்கான செலவு முந்தைய மாதத்தின் 1.1 விழுக்காட்டிலிருந்து ஜனவரியில் 1.4 விழுக்காடு வரை உயர்ந்தது.
தனியார் போக்குவரத்துச் செலவு ஜனவரியில் அதிகளவு குறைந்ததுடன், கார் விலையின் மெதுவான அதிகரிப்பு காரணமாக டிசம்பர் மாதத்தின் 5 விழுக்காட்டிலிருந்து ஜனவரியில் 2.9 விழுக்காடாகக் குறைந்தது.
அதிகளவிலான சேவை, பராமரிப்பு கட்டணக் கழிவினால், தங்குமிடச் செலவு டிசம்பரில் 4.1 விழுக்காட்டிலிருந்து ஜனவரியில் 2.1 விழுக்காடாகக் குறைந்தது.
உணவு, சேவைகள் இரண்டுக்குமான செலவுகள் ஜனவரி மாதத்தில் 3.3 விழுக்காடாகக் குறைந்தன.