கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் மார்ச் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
அதில் எட்டு முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
திறன் மேம்பாடு, சிறப்புக் கல்வி ஆகியவை அவற்றில் அடங்கும்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கலைநிகழ்ச்சி மூலம் கற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் இசை நிகழ்ச்சிகளை நேரில் சென்று காண கூடுதல் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தைச் சாத்தியமானதாக்க கல்வி அமைச்சும் தேசிய கலைகள் மன்றமும் முக்கிய கலாசார அமைப்புகளுடனும் உள்ளூர் கலைக் குழுக்களுடனும் இணைந்து செயல்பட்டதாக கல்வித் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறினார்.
பெற்றோர் ஆதரவுக் குழுக்களுக்கிடையே கூடுதல் பகிர்வுகள் ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, ஒவ்வொரு பெற்றோர் ஆதரவுக் குழுவும் 2024ஆம் ஆண்டிலிருந்து ஆதரவு வட்டம் ஒன்றின் ஒரு பகுதியாக இருக்கும் என்றார் திருவாட்டி கான்.
ஒவ்வோர் ஆதரவு வட்டத்திலும் ஏறத்தாழ பத்து பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர் ஆதரவுக் குழுக்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டிலிருந்து சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், சிறப்புக் கல்வி உதவி ஆசிரியர்கள் ஆகியோரின் சம்பளம் முறையே 15 விழுக்காடு, 17 விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்று கல்வி இரண்டாவது அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறினார்.
சிறப்புக் கல்வி மாணவர்களுக்கான பள்ளிக் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதன்மூலம் சிறப்புக் கல்விப் பள்ளியில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்கள் செலுத்த வேண்டிய அதிகபட்ச கட்டணம் $150லிருந்து $90ஆகக் குறையும் என்று டாக்டர் மாலிக்கி கூறினார்.
பலதுறைத் தொழிற்கல்லூரிக்குத் தகுதி பெறுவதற்கான அம்சங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
2028ஆம் ஆண்டிலிருந்து பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர மாணவர்கள் ஜி2 நிலையில் சிறப்பாகச் செய்த ஒரு பாடத்தைப் பயன்படுத்தலாம்.
நான்கு ஜி3 பாடங்கள், ஒரு ஜி2 பாடம் ஆகியவற்றைக் கொண்டு மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவர்.
திறன் விவரக்குறிப்புக் கருவியை மேலும் பலர் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தக் கருவி 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோது 400 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தின.
இந்தக் கருவி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பாலும் ஜாப்கிரெட்டாலும் உருவாக்கப்பட்டது.
இந்தக் கருவி மூலம் தங்கள் ஊழியர் திறன்களுக்கான அளவுகோலை முதலாளிகள் நிர்ணயிக்கலாம்.
வேலையிடத் திறன்கள் அடையாளத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் பல முதலாளிகளும் ஊழியர்களும் பலனடைய இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக திருவாட்டி கான் கூறினார்.
வெளிப் பயிற்சி செலவுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வெளிப் பயிற்சிகளுக்கு தங்கள் ஊழியர்களை அனுப்ப முடிவெடுக்கும் முதலாளிகளுக்கு அதற்கான செலவுகளை ஈடுசெய்ய கணிசமான அளவில் ஆதரவு வழங்கப்படும் என்று திருவாட்டி கான் கூறினார்.
$10,000 பெறுமானமுள்ள ஸ்கில்ஸ்ஃபியூச்சர் என்டர்பிரைஸ் வழங்கீட்டுத் தொகையை நிறுவனங்கள் பயன்படுத்தலாம்.
இந்த வழங்கீட்டுத் தொகை 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.