பால் குடிக்க மறுத்த குழந்தையை அறைந்தவருக்குச் சிறை

பால் குடிக்க மறுத்த குழந்தையை அறைந்தவருக்குச் சிறை

1 mins read
714277e3-2d25-4406-9b50-be3c11a8c896
13 மாதக் குழந்தையைத் துன்புறுத்தியதற்காக 40 வயது பெண்ணுக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: இணையம்

பால் குடிக்க மறுத்த 13 மாதக் குழந்தையை அறைந்த குழந்தைப் பராமரிப்பு நிலைய ஆசிரியருக்கு ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அக்குழந்தையை அந்த 40 வயது பெண் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் துன்புறுத்தல் காரணமாக குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதைப் பார்த்த குழந்தையின் தந்தை பள்ளியிடம் அதுகுறித்து தெரிவித்து விசாரணை நடத்தும்படி கூறினார்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தைக் காக்க சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் சம்பந்தப்பட்ட குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் பெயரையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது அப்பெண் வேலையில்லாமல் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் அந்தக் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தபோது 2 மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகளைப் பார்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி மாலை 5.20 மணி அளவில் குழந்தைக்குப் பால் ஊட்ட அப்பெண் முயன்றபோது அக்குழந்தை பால் குடிக்க மறுத்தது.

இதனால் கோபமடைந்த அப்பெண் பலவந்தமாகப் பால் ஊட்ட முயன்றார்.

குழந்தை முரண்டு பிடித்ததை அடுத்து, அதன் கன்னத்தில் அப்பெண் அறைந்து அதைத் தள்ளிவிட்டார்.

அப்பெண் மார்ச் 16ஆம் தேதியன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

பிறகு மார்ச் 20ல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று அப்பெண் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்