பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. பெங்களூரு அணியின் இந்த வெற்றிக்கு அணித் தலைவர் விராத் கோஹ்லி அடித்த சதம் முக்கிய காரணம். பூவா தலையாவில் வென்ற பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி டோனியின் தலைமையிலான புனே அணி முதலில் பந்தடித்தது. ரகானே (74), சவுரப் திவாரி (52) ஆகி யோரின் சிறப்பான ஆட்டத்தால் புனே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பில் வாட்சன் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். புனே அணியினர் நேர்த்தியான முறையில் பந்து வீசியதால் கோஹ்லியாலும் ராகுலாலும் முதலில் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் பெங்க ளூரு அணி 7வது ஓவரில்தான் 50 ஓட்டங்களைத் தொட்டது. விராட் கோஹ்லி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி (வலது) பந்தைப் பறக்கவிடுவதைப் பார்த்து செய்வதறியாது தவிக்கிறார் புனேயின் அணித் தலைவர் டோனி. படம்: ஏஎஃப்பி